சென்னை தமிழிசைச் சங்கமும் சிங்கப்பூர் கலாமஞ்சரி எனும் தமிழ் இசைப் பயிற்றுவிக்கும் நிறுவனமும் செய்துகொண்ட புரிந்துணர்வு கையொப்பமிடல் நிகழ்ச்சி இம்மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 'பாசிபிளிட்டி' அறையில் நடைபெற்றது.
இவர்களின் தமிழிசைப் பயணம் பற்றிய விளக்கப் படக் காணொளி தயாரிக்கப்பட்டு நல்ல அரிய பல வரலாற்றுச் செய்திகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டது.
பேராசிரியர் சுப. திண்ணப்பன் தமது தலைமையுரையில் தமிழிசையின் தொன்மை, வளமை, நன்மைகளைப் பட்டியலிட்டு இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததெனப் பாராட்டிப் பேசினார். தமிழிசையைப் பாடுதல் அருகிவரும் இக்காலத்தில் இத்தகைய மீட்டெடுக்கும் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவரும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான ஆர் இராஜாராம், இந்த விழாவின் நோக்கத்தையும் மேலும் இதற்காக கலாமஞ்சரி அமைப்பு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு மேன்மையடைந்ததையும் பற்றிக் குறிப்பிட்டார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூரில் தமிழ் இசையில் நிகர்நிலைப் படிப்புகளுக்கு, கலாமஞ்சரி அமைப்பினரால் சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி மாணவர் களுக்குச் சான்றிதழ் வழங்கிட இயலும் என்பது மகிழ்ச்சிக்குரியது என்றார் அவர்.
இசையறிஞர் திரு அரிமளம் பத்மநாபன் தமது வாழ்த்துரையில் இதன் மூலம் வருங்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உருவாகும் சூழலைத் தாம் மகிழ்வுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
திருமதி சௌந்தரநாயகி வயிரவன் தமது உரையில் கலாமஞ்சரி அமைப்பு தமிழிசை மூலம் செய்துவரும் பல நல்ல சமூகப் பணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த ஒப்பந்தத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட டாக்டர் வெள்ளையப்பன், டாக்டர் கருணாநிதி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
இசையாசிரியர் திருமதி உமா பிரகாஷ் தமது மாணவர்களுடன் நேர்த்தியாகச் சில தமிழிசைப் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் முதல்வர் டாக்டர் மீனாக்ஷி தமது நன்றியுரையில் தமிழிசையின் முக்கியத்துவத்தையும் பயனையும் குறிப்பிட்டு இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
ஒலியொளிக் காட்சிகளை பிரேம்குமார் மற்றும் ஜெயக்குமார் இணைந்து கையாண்டனர். விழா நிகழ்ச்சியினை திருமதி அகிலா முத்து அழகான தமிழில் மிக நேர்த்தியாக வழங்கினார்.
(செய்தி: முனைவர் பா. ராமநாதன்)

