மாதங்கி இளங்கோவன்
ஒரே பாலினத்தவரது வாழ்க்கைமுறை முன்னதாகக் குற்றம் என சிங்கப்பூர் சட்டம் சுட்டியதை அடுத்து கடந்த நவம்பரில் குற்றவியல் தண்டனைச் சட்டம் 377A பிரிவு நீக்கப்பட்டது. தம் அன்பை வெளிப்படையாகக் கொண்டாடுவதற்குக் காலம் கனிந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார், உள்ளூர்க் கலைஞர் நரேன், 42.
தம் காதல் பயணத்தின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நரேன் தம்முடைய காதலர் பாலாவுடன் துருக்கியின் கப்படோசியாவுக்குச் சென்று எழில்மிக்கப் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்திருந்தார்.
ஆனால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யத் தயங்கிய நரேன், 377A சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோது பயமின்றி அப்படங்களைப் பதிவேற்றம் செய்தார்.
"என் நாடே என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளும்போது சமுதாயம் என்ன நினைக்கிறது என்று நான் ஏன் பயப்பட வேண்டும்?" என்றார் நரேன்.
நடிப்பு, 'மாடலிங்' எனக் கடந்த 19 ஆண்டுகளாக கலைத்துறையில் உள்ள நரேன், தமது 32வது வயதில் பாலாவுக்கு அறிமுகமானார். இருவரும் பின்னர் துணைத் தேடும் செயலி ஒன்றின் மூலம் மீண்டும் இணைந்தனர். ஆர்ச்சர்ட் சாலையில் சந்தித்து மணிக்கணக்காய்ப் பேசிய நாளை நினைவுகூர்ந்த நரேன், பாலா நல்ல மனிதர் என அன்றே தாம் உணர்ந்ததாகக் கூறினார்.
ஒரு மாதம் பழகியதில் பாலாவின் குணத்தைப் புரிந்துகொண்டு அவருடன் சேர்ந்திருக்க முடிவெடுத்தார் நரேன்.
இருவரது உறவையும் தொடக்கத்தில் நரேனின் சகோதரி ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். இருப்பினும் நரேன் தமது அடையாளத்தைப் பற்றியும் தாம் பாலாமீது கொண்டுள்ள அன்பைப் பற்றியும் சகோதரிக்குப் புரியவைத்தார். இன்று நரேனின் குடும்பத்தில் ஒருவராக பாலா மாறிவிட்டார்.
நரேனின் நண்பர்கள் பாலாவைப் பற்றி விசாரிக்கும்போதுகூட தங்களின் உறவைத் தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் பார்ப்பதில்லை என்று நெகிழ்ந்தார் நரேன்.
நரேனின் வர்த்தக முயற்சிகளில் பக்கபலமாக இருக்கும் பாலா, எந்நேரமும் தமக்கு உற்சாகமூட்டும் ஒரு துணையாக விளங்குவதாக நரேன் குறிப்பிட்டார்.
தற்போது ஒரே பாலினத் தம்பதியினருக்குத் திருமணம், வீட்டுரிமை போன்றவை எளிதில் அமையாத போதிலும் கூடிய விரைவில் இந்நிலை மாறும் என்று நரேன் நம்புகிறார்.

