ஆ. விஷ்ணு வர்தினி
உலகோடு ஒட்ட ஒழுகும் வேளையில் தமிழர் பண்பாட்டு நடைமுறைகளில் சில, முரண்பாடுகளாக அமையக்கூடும். இத்தகைய சிக்கல்களுக்கு இடையே, உணர்ச்சிபூர்வமாக தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் வாழ்வியல் முறையில் கொண்டாட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினர், வெள்ளிக்கிழமை அன்று தேசிய நூலகத்தில் நடந்தேறிய கருத்தரங்கில் பேசிய ஆறு இளையர்கள்.
தேசிய நூலக வாரியமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து வழங்கிய இக்கருத்தரங்கு, கலாசாரத்தைக் கடைப்பிடிப்பதில் இளையர் எதிர்நோக்கும் சவால்களை ஆராய்ந்தது. அதிநவீன நகரமாகவும் பல்லின சமுதாயமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் உருவாகிவரும் தனித்துவமான சவால்கள் முன்வைக்கப்பட்டன.
மாணவப் பேச்சாளர்களில் ஒருவரான தர்ஷன் மூர்த்தி, நமது பல்லின சமுதாய அடையாளம் ஒவ்வோர் இனத்தாரின் பண்பாட்டு புரிதலையும் ஆழமாக்குகிறது எனத் தெரிவித்தார்.
சிங்கப்பூர்வாழ் தமிழர்கள் பரவலாகக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழா, தீபாவளி போன்ற பண்டிகைகள் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அறிந்தவை. அவை குறித்த உரையாடல்களும் வழக்கமானவை.
இந்நிலையில், இளமையிலிருந்தே தமிழர்கள் விழிப்புணர்வூட்டப்பட்டு வளர்கின்றனர் என்பதை அவர் முன்வைத்தார்.
அதே சமயம், நவீன காலத்தில் நமது வசதிக்கு ஏற்ப பண்பாட்டினை மாற்றி அமைத்துக் கொண்டு வரும் போக்கை இளையர்கள் குறிப்பிட்டனர். வீவக வீட்டில் வசிக்கும் நகரவாசிகளுக்கு உண்மையான விருந்தோம்பல் என்றால் என்ன என்று தெரியுமா எனக் கேள்வி எழுப்பினார் மாணவி ஸ்ம்ருதா சுரேஷ்.
கருத்தரங்கை வழிநடத்திய ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் தமிழாசிரியர் திரு கும்பலிங்கம் உத்தமன், முன்னர் இயல்பு வாழ்க்கையில் பண்பாட்டுக்கு உரமிட்டவை அனைத்தும் அருகருகே இருந்ததைச் சுட்டினார். வாழை இலைகளை உணவு வேளைகளுக்கு வெட்டிக் கொள்ளலாம், தேடிச் சென்று வாங்க வேண்டியதில்லை.
ஆனால், இத்தடைகளைச் சமாளிக்க சிங்கப்பூரின் கல்வித்திட்டம் மாணவர்களுக்குக் கைகொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"21ஆம் நூற்றாண்டுத் திறன்கள் எனக் கூறப்படும் நவீனகால திறன்களைக் கல்வித்திட்டம் வலியுறுத்துகிறது. சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதும் வேற்றுக் கலாசார புரிதலும் இவற்றில் அடங்கும். ஒவ்வொரு மாணவரிடத்திலும் இச்சவால்களைத் தாண்டி அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான திறன்கள் வளர்க்கப்படுகின்றன," என்றார் அவர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகரும் எழுத்தாளருமான திரு வேல ராமமூர்த்தி, சீரிய இத்தலைப்பில் பேச மாணவர்கள் மேடையேற்றப்பட்டதைப் பாராட்டினார்.
தொடர்ந்து இளையர்களை தமிழ்மொழியில் ஈடுபடுத்த, பல முயற்சிகள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமை சந்திரன் கூறினார்.

