சிந்தைக்கு வேலை தர பழகிக்கொள்வோம் வெறுமனே திரையைக் காண்பதை தவிர்ப்போம்

2 mins read
2a3a1efa-eca9-4da9-a67a-0e45ca0f739a
-

சபிதா ஜெய­கு­மார்

அதி­வேக வாழ்க்­கைச் சூழ­லில் சிந்­த­னைக்கு இடம் கொடுக்­கா­த­வாறு தொழில்­நுட்­பம் நமது கவ­னத்தை அதி­கம் ஆட்­டிப்­ப­டைக்­கிறது. 'இன்ஸ்­ட­கி­ராம்', 'டிக்­டாக்', 'யூடி­யூப்' என அவ்­வாறு திசை திருப்­பு­பவை எண்­ணி­ல­டங்கா. இவற்­றின் மத்­தி­யில் உள்ள இளை­யர்­கள், தங்­க­ளின் சிந்­த­னைக்கு அதிக வேலை கொடுக்­கா­மல் 'வெறு­மனே திரையை உருட்­டு­தல்' (mindless scrolling) பெரும் பிரச்­சி­னை­யாக உள்­ளது. அடுத்­த­டுத்த காணொளி­களும் பதி­வு­களும் சிந்­திப்­ப­தற்கு இடங்­கொ­டுப்­ப­தில்லை.

நாம் ஒவ்­வொரு முறை­யும் புதுத் தக­வ­லைப் பெறும்­போது மூளைக்கு 'டொப­மைன்' கிடைக்­கிறது.

"சமூக ஊட­கங்­களில் நேரம் செல­விட செல­விட, முதல் முறை பெற்ற அதே அளவு இன்­பத்தை அடுத்த முறை பெற­மு­டி­வ­தில்லை. இத­னால் போதைப்­பொ­ருள் போன்ற ஒரு­வகை போதையை உண்­டாக்­கும் இந்த 'டொப­மைன்', ஒரு­வரை அடி­மைப்­படுத்­து­கிறது," என்று விளக்­க­ம­ளித்­தார் மன­நல ஆலோ­ச­கர் பத்மா ஜெய்­ராம், 48.

திறன்­பே­சி­கள், சமூக ஊட­கங்­கள் வலம்­வ­ரும் யுகம், அதில் வள­ரும் இளை­யர்­க­ளுக்­குச் சவால் விடுக்­கிறது.

"திரையை எவ்­வித நோக்­கமு­மின்றி நேரக்­க­ணக்­காக உருட்­டு­வ­தால் நேரம் விர­ய­மாகிறது. என் வேலை­க­ளைச் செய்ய சலிப்­பாக இருக்­கும்­போது சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்­து­வது இயல்­பா­கி­விட்­டது. குறிப்­பாக, அதி­வி­ரை­வாக வந்து சேரும் தக­வல்­கள் என் பொறு­மை­யைக் குறைத்­து­விட்­டன," என்று 20 வயது பல்­க­லைக்­கழக மாணவி மூலா வெங்­க­டேஷ் அஷ்­வினி கூறினார்.

அதிக சமூக வலைத்­த­ளங்­க­ளின் பயன்­பாடு மூளையை மழுங்­க­டிக்­கச் செய்­ய­லாம் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­றனர். மூளைச் சோர்வு, கவ­ன­மின்மை எனப் பல பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் இந்­தப் பழக்­கம் அன்­றாட நட­வ­டிக்­கை­க­ளை­யும் பாதிக்­கக்­கூ­டும்.

"நொடிக்கு நொடி புதுத் தக­வல் மூளை­யைச் சென்­ற­டை­யும்­போது தக­வல் சுமை அதி­க­ரிக்­குமே தவிர அவற்றை ஆராய்­வ­தற்கு நேரம் தரு­வ­தில்லை என்­பதால்­தான் இதை, சிந்­தனை அற்ற திரை உருட்­டல் என்று அழைக்­கி­றோம்," என்று கூறு­கிறார் திரு­வாட்டி பத்மா.

"நண்­பர்­கள், குடும்­பத்­தி­ன­ரு­டன் செல­வி­டும் நேரத்­தை­விட சமூக வலைத்­த­ளங்­களில் அதிக நேரம் செல­வி­டு­வ­தும் செயல்­களி­லும் வேலை­யி­லும் முழு கவ­னத்­தை­யும் செலுத்த இய­லா­மை­யும் அறி­கு­றி­க­ளா­கக் கொண்டு சமூக வலைத்­த­ளத்தை அதி­க­ளவு பயன்­ப­டுத்­தும் போக்கை அடை­யா­ளம் காண­லாம்," என்று ரேவன் ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் உள­வி­ய­லா­ளர் மற்­றும் மூத்த ஆலோ­ச­க­ரு­மான முனை­வர் பிர­வீன் நாயர் குறிப்பிட்­டார்.

சமூக வலைத்­தள நிறு­வ­னங்­கள் மக்­களை ஈர்த்­துத் தம் தளங்­களில் அதிக நேரத்­தைச் செல­வ­ழிக்க வைக்­கும் நோக்­கத்­து­டன் செயல்­ப­டு­கின்­றன. இருப்­பி­னும் நிறு­வ­னங்­க­ளை­யும் நம்மையும் குறை­கூ­று­வ­தில் பய­னில்லை என்றார் திரு­வாட்டி பத்­மா.

"மனித வாழ்­வின் பயனற்ற பழக்­கங்­களில் ஒன்று இது. இதற்­கான விழிப்­பு­ணர்­வைப் பெற முயன்­றால் இந்­தப் பழக்­கத்தை மாற்ற முடி­வ­தோடு சமூக ஊட­கங்­களைக் கட்டொழுங்குடன் பயன்­ப­டுத்­தும் பழக்­கத்­தை­யும் வளர்த்­துக்­கொள்ளலாம்," என்று அவர் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

"சமூக ஊட­கங்­களில் செல­வி­டும் நேரத்­தைக் குறைப்­பது, அன்­றைய தினத்­தைச் சமூக ஊட­கங்­க­ளைப் பார்த்­துத் தொடங்­கு­வ­தை­யும் முடிப்­ப­தை­யும் தவிர்ப்­பது, பொழுது போக்க வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது போன்ற மாற்­றங்­களை வாழ்­வில் கொண்­டு­வந்­தால் சிறப்பு," என்று முனை­வர் பிர­வீன் ஆலோ­ச­னை­கள் கூறி­னார்.