காதொலிப்பான்கள் இன்று பலர் காதுகளிலிருந்து பிரிக்க முடியாதவை ஆகிவிட்டன. ஆனால் அவற்றைக் கவனமின்றி பயன்படுத்தினால் செவிப்புலன் இழப்பு நேரும் அபாயமுள்ளது.
அதனால் அவற்றைப் பாதுகாப் பாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். பாதுகாப்பற்ற நடவடிக்கைகளால் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட இளையர்களுக்கு நிரந்தர செவிப்புலன் இழப்பு ஏற்படலாம் என்றும் அது தவிர்க்கப்படக்கூடிய ஒன்று என்றும் உலக சுகாதார நிறுவனம் அண்மையில் எச்சரித்தது.
ஆனால் இளையர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் காதொலிப்பான்களை முறையாக அணியாத தால் செவிப்புலன் குறையும் அபாயத்தில் உள்ளனர்.
காதொலிப்பான்களை அளவுக்கு அதிகமாகச் சத்தமாக வைத்துக் கேட்பதால் செவிப்புலன் இழப்பு அல்லது டினிட்டஸ் எனப்படும் காது இரைச்சல் ஏற்படக்கூடும்.
எவ்வளவு சத்தம், எவ்வளவு நேரம்
காதொலிப்பான்களைக் கொண்டு கேட்பவர்கள், தங்கள் கைப்பேசி அல்லது பிற கருவிகளில் உள்ள அதிகபட்ச சத்தத்தில் 60 விழுக்காட்டுக்கு மேல் வைக்கவேண்டாம் என்று பிரிட்டனின் தேசிய மருத்துவச் சேவை பரிந்துரைத்துள்ளது.
அதிகபட்சம் 60 நிமிடங்களுக்கு மேல் இவ்வாறு காதொலிப்பான்களைக் கொண்டு கேட்க வேண்டாம் என்றும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை இடைவெளி விட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
காதொலிப்பான்கள் வழி கேட்கத் தொடங்கும்போது சத்தத்தை மிகக் குறைவாக வைத்துவிட்டு பின்னர் தேவைப்பட்டால் அதை அதிகரித்துக் கொள்ளலாம்.
எடுத்த எடுப்பில் அதிக சத்தம் வைத்தால் அது அளவுக்கு அதிகமானது என்றாலும் காதுகள் அதற்குப் பழகிக்கொள்ளும்.
மேலும் வெளியில் கேட்கும் இரைச்சலை மறைக்க காதொலிப்பான்களின் ஒலியை அதிகரிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.
பெரியவர்கள் 80 டெசிபல் அளவு சத்தத்துக்கும் குறைவாகவும் ஒரு வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேற்போகாமலும் கேட்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
சிறுவர்கள் கேட்கும் சத்தம் வாரத்தில் 40 மணி நேரத்துக்குக் குறைவாகவும் 75 டெசிபலுக்குக் கீழேயும் இருக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.
ஆனால் தனிப்பட்ட கருவிகளில் 136 டெசிபல் வரை சத்தம் இருக்கலாம் என்று அது எச்சரித்தது. 85 டெசிபல் சத்தத்தைவிட 88 டெசிபல் சத்தம் இரட்டிப்பு இரைச்சல் மிகுந்தது.
இந்நிலையில் 136 டெசிபல் சத்தத்தைச் சில விநாடிகள் கேட்டாலும் அதனால் செவிகளுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படலாம்.
காதொலிப்பான் வகைகள்
சத்தத்தைக் குறைத்து வைப்பதைத் தவிர்த்து, தாங்கள் பயன்படுத்தும் காதொலிப்பான்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம்.
கம்பியுள்ளவை (வயர்ட்), கம்பியில்லாதவை (வயர்லஸ்) , அதிலும் காதை மூடும் பெரிய 'இயர்ஃபோன்' தலையணி ஒலிப்பான், காதுக்குள்ளே ஆழமாகச் செருகும் 'இயர்பட்ஸ்' காதொலிப்பான், எலும்புவழி ஒலியைக் கடத்தும் (போன் கண்டக்ஷன்) ஒலிப்பான் கள் எனப் பலவகைகள் உண்டு.
இவற்றில் 'வயர்லஸ் இயர்பட்ஸ்' எனப்படும் கம்பியில்லா காதொலிப்பான்கள் மிகச் சிறியவை. அவை தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் காதுகளுக்குள் செருகும் 'இயர்ஃபோன்' அல்லது 'இயர்பட்ஸ்' வகைகளைவிட காதுகளை மூடும் தலையணி ஒலிப்பான்கள் செவிப்புலனுக்குக் குறைவான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இவ்வகை ஒலிப்பான்களைக் காதுக்குள் செருகுவதில்லை என்பதே அதற்கு முக்கிய காரணம்.
மேலும், வெளியிலிருந்து கேட்கும் அதிகப்படியான சத்தத்தைத் தடுக்கும் ஒலித் தடுப்பு (நாய்ஸ் கேன்சலிங்) ஆற்றலுள்ள தலையணி ஒலிப்பான்களை அணிவது சிறந்தது என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

