இந்திய புத்தாண்டை இனிப்புடன் வரவேற்க புத்தாண்டுப் பொது வருகை நிகழ்வை இந்திய மரபுடைமை நிலையம் நடத்தவுள்ளது.
இவ்வாண்டின் பொது வருகை நிகழ்வு இனிப்பு வகைகளைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கும்.
ஏப்ரல் 15, 16ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பல நடவடிக்கைகளில் மக்கள் பங்கேற்கலாம்.
நேரடி கலை நிகழ்ச்சிகள் காலை 11 மணிக்கும் மாலை 4 மணிக்கும் தினமும் நடைபெறும். இரு நாள்களிலும் கைவினை நடவடிக்கைகளில் முதல் 600 வருகையாளர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம். வருகை தரும் அனைவருக்கும் இலவச இனிப்புகளும் தேநீரும் வழங்கப்படும்.
வழிகாட்டிகள் உடன்வரும் மரபுடைமை நிலைய சுற்றுலாக்கள், 'லிட்டில் இந்தியா இனிப்புப் பாதை' மரபுப் பயணம் போன்றவை ஏப்ரல் 15ஆம், 16ஆம் தேதிகளில் காலை 11 மணிக்கு தொடங்கும்.
சிறுவர் களுக்கான கதைசொல்லல், கை வினை அங்கங்களும் இரு நாட்களிலும் உண்டு.
சனிக்கிழமை 16ஆம் தேதி பண்டிகைக் கால இனிப்புவகைகள், காரம் ஆகியவற்றை சமையல் வல்லுநர் தேவகி சண்முகம் சமைத்துக் காட்டி விளக்குவார்.
மேலும், பூ மாலை தயாரிக்கும் பட்டறை, பிரபலமான 'பாலிவுட்' நடன முறைப் பயிலரங்கு போன்றவை இடம்பெறும்.
$10 முதல் $20 கட்டணத்தில் நடத்தப்படும் பயிலரங்குகளிலும் நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 'பீட்டிக்ஸ்' இணையத்தளத்திற்குச் சென்று அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இணைய முகவரி: www.ihc-programmes.peatix.com

