இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் தங்கள் நேரத்தில் 80 முதல் 90 விழுக்காட்டைக் கட்டடங்களுக்குள்ளேயே கழிக்கின்றனர். கட்டடங்களுக்குள்ளே காலத்தைக் கழிப்பவர்களுக்கு இயற்கையுடன் தொடர்பு ஏற்பட வீட்டுச் செடிகள் எளிய வழியாக உள்ளன.
வீட்டில் செடிகளை வளர்க்கும்போது மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் குறைவதுடன் மனநிலை மேம்படும்.
அலுவலகத்தில் செடிகள் இருக்கும்போது வேலையில் நிறைவு கூடும் என்றும் உடல்நலம் குறித்த புகார்கள் குறையும் என்றும் ஆய்வுகள் கூறியுள்ளன.
பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பல்வகை வீட்டுச் செடிகள் பங்கேற்பாளர்களிடம் காட்டப்பட்டன. பார்ப்பதற்கு அழகாகவும் பசுமையாகவும், இலைகள் நிறைந்த அடர்த்தியான செடிகளை அதிகமானோர் விரும்பினர். அவை தங்களுக்கு அதிக மகிழ்ச்சி தந்ததாகப் பலர் ஆய்வில் கூறினர்.
மேலும், வட்டமான இலைகள் உள்ள செடிகள் மனம் இளைப்பாற உதவியதாகக் கூறப்பட்டது. குறுகிய இலைகள், முள்ளிருக்கும் அல்லது இலை குறைவான செடிகளை அவர்கள் விரும்பவில்லை.
எளிதில் பராமரிக்கக்கூடிய, அதிகம் தண்ணீர் தேவைப்படாத, பசுமையான செடிகளை வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

