நோன்பின் மாண்பைப் பறைசாற்றிய நிகழ்வு
நோன்புப் பெருநாளையொட்டி புலம்பெயர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான நோன்பு துறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்திய முஸ்லிம் பேரவையின் இளையர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பங்குகொண்டனர்.
இம்மாதம் 9ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள பெஞ்சுரு மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குகொண்ட அனைவருக்கும் நோன்புக் கஞ்சி, பழங்கள், தின்பண்டங்களுடன் பிரியாணியும் வழங்கப்பட்டது.
ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜாலான் புசார் நகர மன்றத் தலைவருமான டாக்டர் வான் ரிசால் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
"சமய நிகழ்வாக இருந்தபோதிலும் பிற இன, சமயத்தைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் பங்குகொண்டது நம்முடைய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் காட்டுகிறது," என்று அவர் கூறினார்.
"பண்டிகைக் காலங்களைப் பாரபட்சமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும். இந்நிகழ்வில் அனைவரும் பங்குகொண்டு மகிழ்ந்தது மனநிறைவையளிக்கிறது," என்று இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முஹம்மது பிலால் கூறினார்.
பெரும்பான்மையான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகள் உள்ள பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது தாங்கள் கலந்துகொள்ள வசதியாக இருந்ததாகவும் நண்பர்களுடன் பண்டிகைக் காலங்களில் நேரம் செலவழிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவித்தனர்.

