புனித ரமலான் மாத நோன்பை ஒட்டி லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள ஐந்து பள்ளிவாசல்களுக்கும் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளுக்கும் 825 கிலோ பேரீச்சம்பழங்களை இந்து அறக்கட்டளை வாரியம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
சிராங்கூன் சாலை அங்குலியா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து அறக்கட்டளை வாரிய உறுப்பினரும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் துணைத் தலைவருமான தாம் சண்முகம், அங்குலியா பள்ளிவாசல் தலைவர் கமால் அங்குலியாவிடம் அன்பளிப்பை வழங்கினார். டன்லப் ஸ்திரீட்டிலுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல் மற்றும் 'அல்வி பள்ளிவாசல், ஜாமியா சூலியா பள்ளிவாசல், பென்கூலன் பள்ளிவாசல் ஆகியனவும் அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டன.
ஐந்து தங்குவிடுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 7,500 வெளிநாட்டு முஸ்லிம் ஊழியர்கள் நோன்பு வைப்பதற்காக பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டன.
ஆறு ஆண்டுகளாக அங்குலியா பள்ளிவாசலில் தொழுகையை முன்நின்று வழிநடத்தும் இமாம் சாஹூல் ஹமீது பாரூக் அகமது, "இது இரு சமயங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துகிறது," என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

