தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நினைவிலிருந்து அகலா தமிழவேள்

5 mins read
a00441bb-f45e-4292-b55b-9c65ac3cff09
-

சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் வேரூன்றவும் தீவு முழுவதும் தமிழ் ஒலிக்கவும் செய்தவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி.

தமிழ்ச் சமூ­கத்­தின் குர­லாக விளங்கி, கல்வி, வாழ்­வா­தா­ரம், உரிமை என மக்­க­ளுக்கு விழிப்­பூட்டி தமிழர் அடை­யா­ளத்தை முன்னிறுத்­தி­ய­வர் கோசா.

அவர் ஏற்­ப­டுத்­திய எழுச்­சி­யின் அதிர்­வ­லை­கள் இன்­றும் தமி­ழர், இந்­திய சமூ­கங்­களை வடி­வ­மைத்­துக் கொண்­டி­ருக்கின்றன.

இன்று அவ­ரின் 120வது பிறந்த நாளாகும். இந்­நாள் வரை நம் நினைவி­லி­ருந்து அகலா அவ­ரின் பரி­மா­ணங்­களை சிங்­கப்­பூர்த் தமிழர்­கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்­ற­னர்.

சமூகச் சீர்­தி­ருத்த முன்­னோடி

சிங்­கப்­பூ­ரின் அடை­யா­ளத்­தில் தமி­ழர்­கள் இன்­றி­ய­மை­யா­தோ­ராக விளங்கச் செய்த சிங்­கப்­பூர்த் தமி­ழர் சீர்­தி­ருத்தச் சங்­கம், தமிழர் பிர­தி­நி­தித்­துவ சபை, தமிழ் முரசு ஆகி­யவை கோ. சாரங்­க­பாணி குறித்த நினை­வுக­ளு­டன் இரண்­டறக் கலந்­தவை.

இவற்­றின்­மூ­லம் அவர் வழி­ந­டத்­திய நட­வ­டிக்­கை­கள் இந்­தியச் சமூ­கத்­தின் குரலை அதி­கார வர்க்­கத்­துக்கு எட்­டு­ம­ள­வில் ஓங்கி ஒலிக்­கச் செய்­தன.

தமி­ழ­கத்­தின் தஞ்சை மாவட்­டத்­தில் பிறந்து, 21 வய­தில் சிங்­கப்­பூ­ரில் காலடி எடுத்து வைத்­த­வர் கோசா. கணக்­கா­ளர் பணி­யில் தேர்ந்­த­வரான அவர், அக்காலத் தொழிலாளர்களுக்கான முதலாளிகளாக விளங்கிய கண்காணிகளின் சுரண்டலும் தமி­ழ­ரின் பரி­த­விப்­பும் அவ­ருள் கிளர்ச்­சியை ஏற்­ப­டுத்­தின.

1930ஆம் ஆண்டு சிங்­கப்­பூர்த் தமி­ழர் சீர்­தி­ருத்தச் சங்­கம் உரு­வாக்­கம் கண்­டது. கோசா­வின் அபி­மா­னத்­துக்­கு­ரிய பெரி­யார் ஈ.வெ. ராம­சா­மி­யின் சுய­ம­ரி­யாதை கொள்­கை­களே இவ்­வ­மைப்­பின் அடி­நா­தம். தமி­ழர் சமூ­கத்­தின் பின்­ன­டை­வுக்கு கார­ண­மாய் இருந்த மூட நம்­பிக்கைகளைத் தகர்க்க இது இயங்­கி­யது.

விதவை மறு­ம­ணம், கலப்புத் திரு­ம­ணம் ஆகி­யன கோசா குரல் கொடுத்த சமூகச் சீர்திருத்தங்களில் ­சில. அதற்கேற்ப, லிம் பூன் நியோ எனும் சீன இனத்­த­வரை தம் மனைவியாக அவர் கைப்­பி­டித்­தார்.

எழுச்­சி­யின் முத்­திரை

1929ல் 'முன்­னேற்­றம்' வார இதழின் துணை செய்தி ஆசி­ரி­ய­ராக கோசா­வின் பொது­நலப் பய­ணம் துவங்­கி­யது. அப்­ப­ய­ணம் அரைநூற்­றாண்­டுக்­கு மேல் நீடித்­தது.

தமி­ழர்­கள் பல­வீ­ன­மாய் இருப்­ப­தால் இந்­தியச் சமூ­கம் பல­மற்­ற­தாய்க் கிடக்­கிறது எனும் அவ­ரின் எண்ணம் அவ­ரது சீரிய நோக்­கத்தைப் பறை­சாற்றியது.

சமூ­கத்­தின் குர­லாக ஒலிக்கும் நோக்­கில் கோசா 1935ஆம் ஆண்­டில் நிறு­விய தமிழ் முரசு, ஒரு காசு விலையில் ஏழை எளி­யோ­ரின் கைக்கு எட்­டியது.

வார இதழான தமிழ் முரசு அவ­ரின் சீர்­தி­ருத்த இயக்­கத்­தின் ஊட­க­மாக மட்­டு­மன்றி, கருத்து, கலை சுதந்­தி­ரத்­துக்­கான மேடை­யா­க­வும் திகழ்ந்­தது.

1958ஆம் ஆண்­டில் தமிழ் முர­சில் அச்­சுக் கோக்­கும் ஊழி­ய­ராக இணைந்த திரு நட­ரா­ச­னின், 84, மனத்தில் மக்­க­ளைக் கவ­ரும் ஆளு­மை­யா­க­வும், அஞ்சாத தலை­வ­ரா­க­வும் துடிப்­பு­மிக்க செய்தி ஆசி­ரி­ய­ரா­க­வும் கோசா தொடர்ந்து நிலைத்­தி­ருக்­கி­றார்.

"கோசா ஏற்­றத்­தாழ்­வு­ பாரா­மல் எல்­லோ­ரை­யும் சம­மாக நடத்தி, எல்லா இடங்­க­ளி­லும் சமூக ஒற்று­மையை வலி­யு­றுத்­திய இலட்­சி­யம் மகத்­தா­னது," என்றார் தற்­போது தமிழ்முர­சில் பிழைதிருத்­து­நராகப் பணியாற்றும் திரு நட­ரா­சன்.

பிடுங்கி நடப்­பட்ட அய­லக தமி­ழர்­கள் வேர் மற­வா­மல் இருக்­க­வேண்­டும்; வேர் பரப்பி சிங்­கப்­பூ­ரில் தழைக்­க­வேண்­டும், உத­வி­பெ­றும் சமூ­க­மாக அன்றி, உத­வும் சமூ­க­மாக தமி­ழர்­கள் நிலைக்க வேண்­டும். இக்­க­னவு நன­வாக சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெறு­வ­தற்கு தமிழ் மக்­களை கோசா ஊக்­கு­வித்­த­தை திரு நட­ரா­சன் நினைவுகூர்ந்தார்.

தமிழ் முர­சின்­ மூ­லமும் நேரிலும் மக்­களை ஊக்­கு­வித்­து வந்த கோசா­வின் போராட்­டம் கிட்­டத்­தட்ட 20,000 பேரைக் குடி­யு­ரி­மைக்கு விண்ணப்­பிக்கச் செய்­தது.

தமிழ் முரசு மட்­டு­மன்றி, 'சீர்­தி­ருத்­தம்', 'ரிஃபார்ம்' எனும் ஆங்­கில மாத இதழ், 'இந்­தி­யன் டெய்லி மெயில்' எனும் ஆங்­கில நாளி­தழ் ஆகி­யன கோசா­வின் வழி­ந­டத்­த­லின்­கீழ் சமூக நில­வரத்தை தோலு­ரித்­துக் காட்­டின.

தமிழ்ச் சமூகத்­தைத் தாண்டி, தமி­ழர் அல்­லாத இந்­தியச் சமூ­கத்­தை­யும் விழிப்ப­டைய இவற்றை பயன்ப­டுத்­தி­னார் கோசா.

இன்று சிங்கப்பூரின் கொள்கை அமைப்பில் மையக் கருவாக கருதப்படும் சமூகப் பிணைப்பு கோசாவின் அடிப்படைக் கோட்பாடாக இருந்துள்ளது என்பது அவரின் பிரசாரங்களில், தலையங்கங்களில் வெள்ளிடை மலை.

தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரில் அதி­காரத்­துவ மொழி­யாக தலைநிமிர வித்­திட்­ட கோசா. வாழும் மொழி­யாக தமிழ் நிலை­பெ­று­வ­தற்­கான அடித்­த­ளத்தை அவ­ரின் முற்­போக்கு சிந்­தனை அன்றே உரு­வாக்கி திடப்­ப­டுத்தி இருந்­தது.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தோர், சாதி, சமய பேதமில்லாமல் தமிழ்­மொ­ழி­யோ­டும் ஒன்றுபடும் கண்­ணோட்­டத்­து­டன் 'தமிழர் திரு­நாள்' 1952ல் உத­ய­மா­னது.

சித­றிக் கிடந்த 50க்கும் மேற்­பட்ட தமி­ழர், தமிழ்­மொழி அமைப்புகளை இணைத்து தமிழர் பிர­தி­நி­தித்­துவ சபையை உரு­வாக்­கி­யதைத் தொடர்ந்து, இவ்­வி­ழாவை கோசா அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

அந்­நா­ளில் 10,000க்கும் மேற்­பட்டவர்களை திரளாக ஆண்டு­தோ­றும் ஈர்த்த இதுவே, இன்­றைய தமிழ்­மொழி விழா­விற்­கான முன்­னோ­டி­யா­கும்.

கோசா அதே ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­திய 'மாண­வர் மணி­மன்ற மலர்', இளை­யர்­க­ளைப் படைப்­பா­ளர்­க­ளாக உரு­மாற்­றிய ஒரு மகத்­தான தளம்.

அதே சமயத்தில் 'எழுத்­தா­ளர் பேரவை', ஓர் இலக்­கி­யக் களமாக விளங்கியது.

"சிங்­கப்­பூர் இலக்­கி­யத்­து­றை­யின் பல பிர­பல முகங்­க­ளுக்கு 60களில், 70களில் மாண­வர் மணி­மன்ற மலரே தொடக்­கப் ­புள்­ளி­யாக அமைந்­தது.

தமிழ் முரசு தொடங்கிய எழுத்தாளர் பட்டறை, சிங்­கப்­பூர், மலே­சிய எழுத்­தா­ளர்­க­ளுக்கு இடையே பாலம் அமைக்­க வழி வ­குத்­தது," என்­றார் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் நா. ஆண்­டி­யப்­பன்.

கவி­ஞர்­கள், கதா­சி­ரி­யர்­கள், நாட­கக் கலைஞர்கள் என பல­ த­ரப்­பட்டவர்கள் மலர வழி­கோ­லிய மாண­வர் மணி­மன்ற மலர், இன்று மாண­வர் முர­சாக தமிழ் முரசுடன் தொடர்­கிறது.

தமிழ்க் கல்­வித்­துறை ஆசான்

ஒவ்­வொரு தமிழ் மாண­வ­ருக்­கும் தமிழ் கற்­கும் வாய்ப்­பை­யும் ஒவ்­வொரு தமி­ழா­சி­ரி­ய­ருக்­கும் உரிய அங்­கீ­கா­ரத்­தை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தில் கோசா­வின் உன்­னதப் பங்கு இருந்­தது.

சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பள்­ளி­கள் இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர் இயங்க முடி­யா­மல் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருந்த சம­யத்­தில் அவற்றுள் 23 பள்­ளி­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் ஆத­ரவை கோசா பெற்­றுத் தந்­தார்.

அவற்­றின் நிர்­வா­கத்­தைக் கவ­னிக்­கும் தமிழ்க் கல்­விக் கழ­கத்தை 1948ல் உரு­வாக்கி அதன் தலை­வரா­க­வும் அவர் செயல் பட்டார்.

மலாயா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தமிழ்த்­து­றையை 1956ல் அமைத்த கோசா­வின் தடம், வர­லாற்­றுச் சிறப்பு மிக்க சாதனை என்­றார் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத் தலை­வர் தன­பால் குமார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சமஸ்­கி­ரு­தம் இடம்­பெ­று­வ­தற்­கான போட்­டிக்கு இடையே, அவர் தமிழ் ­மொழிக்­காக அய­ராது போராடி சாதித்­தது வியக்­கத்­தக்­கது என்று அவர் தெரி­வித்­தார்.

"பல துறை­களில் வளர்­வ­தற்­கும் மிளிர்­வ­தற்­கும் தமி­ழ­சா­ரி­யர்­க­ளுக்­குத் தளம் அமைத்­துக் கொடுத்­தார் கோசா. அவ­ரின் திட­மான சிந்­த­னை­கள், தொடர்ந்து தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்கு ஊட்டச்சத்தாக விளங்குகின்றன," என்­றார் அவர்.

இன்­றும் ஓங்­கும் 'தமி­ழ­வேள்'

1974ஆம் ஆண்­டில் கோ. சாரங்­க­பாணி மறைந்­தா­லும், அவ­ரின் நினை­வ­லை­கள் தொட­ர­லை­யாய் நிலைத்­துள்­ளன. சிங்­கப்­பூர்த் தமிழ் இலக்­கி­யத்­து­றை­யில் தடம்­ப­தித்­தோரை அங்­கீ­க­ரிக்­கும் 'தமி­ழ­வேள் விருது' கோசா­வின் ஒரு நினைவு முத்­திரை.

இவ்­வி­ருது 1996ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் கழ­கத்­தால் தொடங்­கப்­பட்­டது.

சிறப்­புமிகு தமி­ழ­வேள் விரு­தினைப் பெற்­றுள்ள மூத்த படைப்­பாளர்­களான மா. இளங்­கண்­ணன், கவி­ஞர் ஐ. உல­க­நா­தன், கவி­ஞர் க.து.மு. இக்­பால், பாத்­தே­றல் இள­மா­றன், பொன். சுந்­த­ர­ராசு, கவி­ஞர் அம­ல­தா­சன், இராம. கண்­ண­பி­ரான், எம்.கே. நாரா­ய­ணன், செ.ப.பன்னீர் செல்வம் முதலி­யோ­ரின் எழுத்து, மாண­வர் மணிமன்ற மலரில் அறி­மு­கம் கண்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

தமி­ழா­சி­ரி­யர்­களும் மாண­வர்­களும் கோசாவை நினை­வு­கூ­ரும் வண்­ணம் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கமும் ஆண்­டு­தோ­றும் 'தமி­ழ­வேள் நினை­வுக் கருத்­த­ரங்கு' எனும் நிகழ்வை முன்­னெ­டுத்து வரு­கிறது.

பல்­லினச் சமூ­க­மான சிங்­கப்­பூ­ரில் நாட்­டுப்­பற்றை, ஒற்­று­மையை, வலி­யு­றுத்­திய கோசா­வின் வாழ்க்கை இளை­ய­ருக்கு ஒரு படிப்­பினை என தெரி­வித்­தார் தமி­ழ­வேள் நற்­பணி மன்­றத்­தின் ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் கலை­வாணி இளங்கோ.

"இன்­றைய இளை­யர்­கள் நாளைய தலை­வர்­க­ளாக உரு­வாக கோசா­வின் வாழ்க்­கை­யும் அவர் விட்­டுச்­சென்ற தட­மும் தொடர்ந்து அடித்தளமாக இருக்கும்," என்­றார் அவர்.