ஆரஞ்சுடீயின் சொத்து முகவர்கள் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்காக ஒன்றிணைந்து $21,000 திரட்டியுள்ளனர்.
நோன்புப் பெருநாள் பண்டிகை கால கொண்டாட்ட உணர்ச்சியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதோடு, சமூக அக்கறையுடன் அனைவருக்கும் உதவும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இம்மாதம் 16ஆம் தேதியன்று 'ஹார்ட்பீட் எட் பிடோக்' வளாகத்தில் 'ஆரஞ்சுடீ ஃபெஸ்டிவ் கேர் 2023' எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1000 குடும்பங்கள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.
பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் 'ரே ஆஃப் ஹோப்'புடனும் சமய நல்லிணக்க ஆர்வலர் அமைப்பான 'ரோசஸ் ஆஃப் பீஸு'டனும் இணைந்து இந்த இயக்கத்தை ஆரஞ்சுடீ நடத்தியது.
ஃபெஸ்டிவ் கேர் என்ற இந்த இயக்கத்திற்காக பள்ளிகள், அடித்தள அமைப்புகள், சமூக அமைப்புகள் என பத்து பயனாளர் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவ ஏற்பாட்டாளர்கள் முன்வந்தனர்.
அரிசி, எண்ணெய், சீனி, பேரிச்சம்பழம் என $30 மதிப்புள்ள உணவுப் பொருள்கள் கொண்ட அன்பளிப்புப் பை ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.
விலைவாசிகள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில் இந்தக் கூட்டு முயற்சி வசதி குறைந்தோருக்கு நிச்சயம் மிக உதவியாக அமையும்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தொடர்பு, தகவல் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வருகை புரிந்தார்.
"ஐந்து ஆண்டுகளாக நடப்பில் உள்ள இந்த இயக்கத்தை நாங்கள் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இன்னும் பெரிய அளவில், கூடுதலானோருக்கு பயனளிக்கும் வகையில் நடத்தும் நோக்கம் கொண்டுள்ளோம்," என்று ஆரஞ்சுடீயின் மூத்த துணை இயக்குநரான திரு பஜுருதீன் மரைக்காயர் கூறினார்.
"வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பல இன, சமயத் தொண்டூழியர்களும் வெவ்வேறு பங்குதாரர்களும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து நிதித்திரட்டு, தளவாடம், விநி யோகம் உள்ளிட்டவற்றுக்கு உதவியுள்ளனர்," என்று ரோசஸ் ஆஃப் பீஸ் நிறுவனரும் முன் னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான முகம்மது இர்ஷாத் தெரிவித்தார்.
செய்தி: கருணாநிதி துர்கா

