பருப்பு, பயறு வகைகளைச் சரியான கால அளவிற்கு ஊறவைப்பதன் மூலம் அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகளின் அளவை அதிகப்படுத்தலாம்; செரிமானத்திறனையும் மேம்படுத்தலாம்.
பருப்பு வகைகள் புரதச்சத்துமிக்க உணவுப்பொருளாக விளங்குகின்றன. சமைப்பதற்குமுன் அவற்றை நீரில் ஊறவைப்பதன் மூலம் அவற்றின்மூலம் கிடைக்கும் பயனைப் பல மடங்கு பெருக்கலாம்.
உடலின் ஊட்டச்சத்து உட்கவர்திறன் மேம்படுகிறது; ஊட்டச்சத்து அல்லாத ஃபைட்டிக் அமிலத்தை நீக்கவும் கால்சியம், இரும்பு, துத்தநாகம் (ஸிங்க்) போன்ற சத்துகளைப் பிணைக்கவும் உதவுகிறது.
பருப்பு வகைகளைச் சரியான கால அளவிற்கு ஊறவைப்பதன் மூலம் உடல் அவற்றை எளிதில் செரித்துக்கொள்கிறது; சமைப்பதற்கான நேரமும் அதற்குச் செலவாகும் எரிபொருளின் அளவும் குறைகிறது; சுவை கூடுகிறது.
எல்லாப் பருப்பு வகைகளையும் பயறு வகைகளையும் ஒரே கால அளவிற்கு ஊறவைக்கக் கூடாது. முழுப் பயனும் கிடைக்க சிலவற்றை 8-10 மணி நேரம் ஊற வைக்க வேண்டியிருக்கும்; சிலவற்றை 4-5 மணி நேரம் ஊற வைத்தாலே போதுமானது.
தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த பருப்பு வகைகளை நாளும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதோடு, உயிர்ச்சத்துகள், இரும்பு, துத்தநாகம், ஃபோலேட், மெக்னீசியம் போன்ற கனிமச் சத்துகளும் பருப்பு வகைகளில் உள்ளன.
பருப்பு வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாட்பட்ட நோய்கள் நம்மை அணுகாமல் தடுக்கலாம். அவை இதய நலத்தை மேம்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோர் பருப்பைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
பருப்பு வகைகளால் கிடைக்கும் இத்தகைய பல நன்மைகளைப் பெற, அவற்றைச் சரியான கால அளவிற்கு ஊறவைப்பது அவசியம். எந்தப் பருப்பை எவ்வளவு நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும் என்பது பற்றி தமது அண்மைய 'இன்ஸ்டகிராம்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த ஊட்டச்சத்து வல்லுநரான ஜூகி கபூர்.
"பருப்பு வகைகளை ஊறவைப்பதன் மூலம் அவற்றைச் சமைப்பதற்கான நேரம் குறையும். இதனால் ஊட்டச்சத்து இழப்பும் தவிர்க்கப்படும். பயறு, பருப்பு வகைகளை ஊற வைப்பதால் செரிமானம் எளிதில் நடைபெறும்; வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்சினைகள் எழாது. ஊட்டச்சத்து அளவு மேம்படும். அதே நேரத்தில், ஊட்டச்சத்து அல்லாத பொருள்களால் ஏற்படும் தாக்கமும் குறையும்," என்கிறார் திருவாட்டி ஜூகி.
உடைந்த பருப்பு வகைகள்
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு போன்ற உடைந்த பருப்பு வகைகளைச் சமைப்பது எளிது என்பதால் 4-6 மணி நேரம் ஊறவைத்தால் போதுமானது.
முழுப் பயறு வகைகள்
பாசிப் பயறு, கொள்ளு, தட்டைப்பயறு போன்ற முழுப் பயறுகளை முளை கட்டச் செய்தும் பயன்படுத்தலாம். இவற்றை 6-8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
அவரை, கொண்டைக்கடலை
சோயா அவரை, சிவப்புத் தட்டைப்பயறு, கொண்டைக்கடலை போன்றவை அளவில் சற்றுப் பெரியதாக இருப்பதால் அவற்றை 8-10 மணி நேரம் ஊற வைப்பது சரியாக இருக்கும்.

