இவ்வாண்டு கோடைக்காலத்தில் உலகின் பல பகுதிகளையும் வெயில் வாட்டி வருகிறது. அதனால், பகற்பொழுதில் வெளியில் செல்வதைத் தவிர்க்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, நீரிழிவு பாதிப்பு இருப்போர் வெயில் காலத்தில் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக வெப்பம் உடலின் சர்க்கரை அளவில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார் இந்தியாவின் குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் உள்மருத்துவப் பிரிவு தலைமை ஆலோசகர் டாக்டர் துஷால் தயாள்.
"சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தால் அதிகமாக வியர்க்கும். இப்படி இருக்கும்போது, தண்ணீரையும் குறைவாக அருந்தினால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் ரத்தம் செறிவடைந்து, சர்க்கரையின் அளவு அதிகமாகும். வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் பட்சத்தில், கார்ட்டிசால், வாசோபிரஸ்ஸின் போன்ற சுரப்புநீர் அதிகமாகச் சுரந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்திவிடும்," என்று டாக்டர் துஷார் விளக்கினார்.
வெயில் நேரத்தில் நீரிழிவு பாதிப்புடையோர், அது இல்லாதோரைவிட விரைவில் நீர்ச்சத்தை இழந்துவிடக்கூடும் என்றார் நீரிழிவு குறித்து விழிப்புணர்வூட்டி வரும் 'தி ஹெல்த் பேன்ட்ரி' நிறுவனரும் ஊட்டச்சத்து வல்லுநருமான குஷ்பு ஜெயின் திப்ரவாலா.
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒருவர் சில பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் துஷார்.
"இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு கலந்த நீர், தர்பூசணி, பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சுப் பழம், தயிர், கீரைகளும் பச்சைக் காய்கறிகளும் கலந்த சாறு, வெள்ளரி, தக்காளி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்," என்றும் அவர் அறிவுறுத்தினார்.
"ஒருநாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் நீர் அருந்துவது உடலின் நீர்ச்சத்தைக் குறையவிடாமல் பார்த்துக்கொள்ளும். வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அல்லது காய்கறிக் கலவைச் சாற்றை அருந்தலாம்," என்று திரு திப்ரவாலா கூறினார்.
அத்துடன், கோடைக் காலத்தில் மது அருந்துவதும் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவு, காப்பி, தேநீர் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காலையில் அல்லது வெயில் தணிந்தபின் மாலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

