கண்ணகி, சீதா, பாஞ்சாலி,
குந்தவை, சாவித்திரி போன்ற இலக்கியங்களில் இடம்பெற்ற பெண்களின் கதைகளை நாட்டியம் மூலம் மேடையேற்றியது 'தத்வா' நடன அமைப்பு.
இம்மாதம் 15ஆம் தேதி அன்று நடந்த இந்நிகழ்ச்சி தேசிய நூலகத்தின் நாடக மையத்தில் நடந்தேறியது. தத்வா நடன அமைப்பு பல நடனக்குழுக்களைச் சேர்ந்த நடன
மணிகளை ஒன்று சேர்த்து இந்த படைப்பை மேடையேற்றியது.
நாயகி: பெண்மையின் அழகு என்ற பெயர் கொண்ட இந்நிகழ்ச்சி ஒரே நாளில் இரண்டு முறை மேடையேற்றப்பட்டது. இந்த நடனத்தைக் கண்டு ரசிக்க நூற்றுக்கணக்கானோர் வருகை புரிந்தனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிரமங்கள், கவலைகளை அழகாக நாட்டியம் மூலம் விளக்கினர்.
இந்த நாயகிகளின் அழகு, வெளித் தோற்றம் மட்டுமின்றி அவர்களின் சாதனைகள், உணர்வுகள், அனுபவங்கள் உள்ளிட்ட அழகை இந்த நடனம் வெளிக்கொணர்ந்தது.
பாண்டவர்களின் துணைவியான பாஞ்சாலியின் தைரியம், பலத்தை பெண்மையுடன் வெளிக்கொண்டுவர நடனமணி வர்ஷா விஸ்வநாத் பல பயிற்சிகளை மேற்கொண்டார்.
"பாஞ்சாலியை கதைகள் மூலம் அறிந்துள்ளேன். ஒரு பெண்ணாக அவருக்கு இருந்த உணர்வுகளை நானே உள்வாங்கி நடனம் ஆடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது," என்றார் வர்ஷா.
இந்த நிகழ்ச்சியின் கலை வடிவங்களை அமைக்கவும் வர்ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எவ்வளவு காட்சிப்பூர்வமாக சித்திரிக்க முடியும் என்பதை ஆராய்வதற்கு இடமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டதைப் பகிர்ந்துகொண்டார் வர்ஷா.
வேலை, பள்ளி போன்ற பல பொறுப்புகள் கொண்ட பல நடன
மணிகளும் இதற்காகவே நேரம் ஒதுக்கி கலை மீதான நாட்டத்தால் ஒன்றிணைந்ததை பகிர்ந்துகொண்டார் கே வித்யாஸ்ரீ.
"இளையர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த தத்வா தளம் அமைத்துக் கொடுத்தது. தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு, நான் ஆடும் முதல் நிகழ்ச்சி. நேரப் பற்றாக்குறை, ஒத்திகைகள் போன்ற பல சிக்கல்களையும் தாண்டி இதைப் படைத்ததில் மிக்க மகிழ்ச்சி," என்றார் வித்யாஸ்ரீ.
இதற்கு முன் தொலைக்காட்சி, திரைப்படங்கள் அல்லது நூல்களில் மட்டும் கண்டு ரசித்த கதாபாத்திரங் களின் வேதனைகளையும் மகிழ்ச்சி யையும் நடனம் மூலம் கண்முன் கொண்டு வந்தது தங்களின் மனத்தைக் கவர்ந்தது என்று பார்வையாளர்கள் கூறினர்.

