மாதங்கி இளங்கோவன்
பாஸ்கர் கலைக் கழகத்தின் வருடாந்திர கலை விழாவான 'பாஸ்கரியம்', 2015ஆம் ஆண்டிலிருந்து மேடையேற்றப்பட்டு வருகிறது. பலதரப்பட்ட இசை மற்றும் நடனப் படைப்புகள், கலைஞர்களுக்கான விருதுகள் எனக் கொண்டாட்ட உணர்வு நிறைந்த ஒரு நிகழ்வு இது.
இவ்வாண்டின் 'பாஸ்கரியம்' கலை விழாவில் திரு, திருமதி பாஸ்கரின் வாழ்க்கைப் பயணத்தைத் தத்ரூபமாகச் சித்திரிக்கும் வண்ணம் கேலிச்சித்திர நூல் ஒன்று வெளியிடப்பட்டது. 'ஃபோர் த லவ் ஆஃப் டான்ஸ்' என்னும் தலைப்பைக் கொண்ட இந்நூலில் இடம்பெற்றுள்ள பற்பல அனுபவங்களும் பாஸ்கர் தம்பதியினரின் மகளான மீனாட்சி பாஸ்கர் நினைவுகூர்ந்தவை.
இம்மாதம் 27ஆம் தேதியன்று 'குட்மன் ஆர்ட்ஸ்' நிலையத்தில் 'ஃபோர் த லவ் ஆஃப் டான்ஸ்' புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு, நான்கு நாள்களுக்கு நடைபெற்று வரும் 'பாஸ்கரியம்' கலை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. பல்லாண்டுகளாக இக்கலைக் கழகத்தில் பயின்றுவரும் நடனமணிகள் நடனமாடியதோடு இசைக் கலைஞர்களும் பாடல்கள் சிலவற்றைப் படைத்திருந்தனர்.
'அபி க்ரிஷ்' என்ற பெயரில் எழுதிவரும் எழுத்தாளர் அபிராமி கிருஷ்ணஸ்வாமி, தம் பதின்ம வயதில் பாஸ்கர் கலைக் கழகத்தில் நாட்டியம் கற்றுக்கொண்டவர். தற்போது குழந்தைகளுக்கு இருமொழிகளில் நூல்கள் எழுதிவரும் இவர், பாஸ்கர் தம்பதியினரின் கலைப் பயணத்தைப் பற்றி எழுத வாய்ப்பைப் பெற்றபோது பேரானந்தம் அடைந்ததாக நூல் வெளியீட்டில் கூறியிருந்தார்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேலிச்சித்திரத்தை ஆறு மாதங்களில் உருவாக்கியவர் கோல்கத்தாவைச் சேர்ந்த சயான் முக்கர்ஜி. ஒரு நூலிலுள்ள கேலிச்சித்திரத்தை வரைவதற்கு ஏறத்தாழ ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகாலம் வரை ஆகலாம். ஆனால் குறுகிய காலகட்டத்தில் சயான் இந்த நூலுக்கான கேலிச் சித்திரத்தை வரைந்தது பாராட்டுக்குரியதாகும் என்றார் அபிராமி.
இவ்வாண்டின் 'பாஸ்கரியம்' விழாவில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 'பிரசாந்தம்' தொடர் நிகழ்ச்சி நேற்று முன்தினம் முதல் இன்றுவரை நடைபெறுகிறது. புல்லாங்குழல், வயலின், வீணை, கர்நாடக இசை, பரதநாட்டியப் படைப்புகள் அதில் இடம்பெறுகின்றன. விழாவின் ஆகச் சிறந்த அம்சமாக நாளைகடம் கார்த்திக் தம் 'ஹார்ட்பீட்' இசைக்குழுவுடன் இணைந்து விக்டோரியா கலையரங்கத்தில் நிகழ்ச்சியொன்றைப் படைக்கஇருக்கிறார்.
'பாஸ்கரியம்' கலை விழாவில் மற்ற கலாசாரங்களை அரவணைக்கும் விதமாக பிலிப்பீன்ஸ் மூங்கில் நடனத்தை நேற்று சிங்கப்பூரின் பிலிப்பீன்ஸ் நடனக்குழு படைத்திருந்தது. அதோடு, மற்ற இனத்தவர் இந்திய கலாசாரத்தைக் கொண்டாடும் விதமாக மலேசியாவின் மிஷெல் ஜுவெனி ஒடிசி நடனத்தைப் படைத்தார்.
மற்ற கலைக் கழகங்கள், அதாவது பரதா ஆர்ட்ஸ், சுவாரிதம் ஆகியவற்றைச் சேர்ந்த கலைஞர்களும் இவ்வாண்டின் 'பாஸ்கரியம்' கலை விழாவில் கலந்துகொள்கின்றனர்.
பாஸ்கர் கலைக் கழகம் இவ்வாண்டு வழங்கும் சில விருது
களுக்கிடையே அவாண்ட் நாடகக் குழுவின் நிறுவனர் ஜி. செல்வநாதனுக்கு, 'நாட்டிய கலா நிபுணா' என்ற விருது வழங்கப்பட்டது. அதேபோல் பரதா ஆர்ட்ஸ் நடனப் பள்ளியின் நிறுவனர்களான கேசவன் சகோதரிகள் என்றழைக்கப்படும் ஜெயந்தி கேசவன், சுகந்தி கேசவன் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

