நோம்பென்: கம்போடியாவில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் என இரண்டு ஓட்டப்பந்தயங்களிலும் தங்கம் வெல்ல இலக்கு கொண்டுள்ளார் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா (படம்).
கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த அப்போட்டிகளில் 200 மீ. ஓட்டத்தில் முதன்முறையாக இவர் தங்கம் வென்றார்.
ஈராண்டுகளுக்குப்பின் நடந்த போட்டிகளில் தங்கத்தைத் தக்க வைக்கத் தவறிய சாந்தி, காயங்களாலும் அவதிப்பட்டார்.
ஆயினும், ஹனோயில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மீண்டும் இவர் தங்கத்தைத் தனதாக்கிக்கொண்டார்.
இவ்வாண்டு சாந்திக்கு நல்லாண்டாக இருந்து வருகிறது. 200 மீட்டரில் இருமுறையும் 100 மீட்டரில் மும்முறையும் தமது சொந்த தேசிய சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
ஆசியாவில் இப்போதைக்கு 200 மீ. ஓட்டத்தில் இவர்தான் அதிவேக வீராங்கனை; 100 மீட்டரில் இரண்டாவது அதிவேக வீராங்கனை.
சாந்தி 4x100 மீ. அஞ்சல் ஓட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

