நோம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆண்கள் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இருமுறை சண்டை மூண்டது.
இந்தோனீசியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இந்த ஆட்டத்தில் இப்படி நிகழ்ந்ததற்கு தாய்லாந்துக் காற்பநதுச் சங்கம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. தவறு இழைத்தோறுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் சங்கம் உறுதியளித்தது.
கம்போடியத் தலைநகர் நோம்பென்னின் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வுதாய்லாந்து தேசிய அணியின் நற்பெயருக்குப் பங்கம் விளைவித்துள்ளதாக தாய்லாந்துக் காற்பந்துச் சங்கம் குறிப்பிட்டது.
"குறிப்பாக எல்லா தாய்லாந்து மக்களையும் பிரதிநிதிக்கும் பயிற்றுவிப்பாளர்கள் பணியில் இருக்கும்போது சவாலான சூழ்நிலையிலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது கட்டாயம்.
"சண்டையில் ஈடுபட்டோர்மீது விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும். தண்டனை விதிக்கப்படும். விதிவிலக்குகள் இருக்காது. அணி நாடு திரும்பியவுடன் விசாரணை தொடங்கும்," என்று அறிக்கை ஒன்றில் சங்கம் தெரிவித்தது.
ஆட்டத்தில் 5-2 எனும் கோல் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது இந்தோனீசியா.
90 நிமிடங்களுக்குப் பிறகு கோல் எண்ணிக்கை 2-2 என சமநிலையில் இருந்தது. கூடுதல் நேரத்தில் மூன்று கோல்களைப் போட்டு இந்தோனீசியா வாகை சூடியது.
32 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆண்கள் காற்பந்துப் போட்டியில் தங்கம் வென்றது இந்தோனீசியா.
விறுவிறுப்பான ஆட்டத்தில் மண்ணைப் போடும் வண்ணம் மோதல்கள் அமைந்தன. சண்டைகள் மூண்டதைத் தொடர்ந்து மூன்று தாய்லாந்து வீரர்களும் ஒரு இந்தோனீசிய வீரரும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
முற்பாதியில் 2-0 எனும் கோல் கணக்கில் இந்தோனீசியா முன்னிலை வகித்தது. 90வது நிமிடத்தில் தாய்லாந்து சமநிலை கண்டது. அப்போது முதல் சண்டை மூண்டது.
கூடுதல் நேரத்தில் இந்தோனீசியா அதன் மூன்றாவது கோலைப் போட்டபோது மீண்டும் சண்டை மூண்டது.

