ரோம்: மோசமான பருவநிலை காரணமாக இத்தாலியின் இமோலா நகரில் இவ்வார இறுதியில் நடைபெறவிருந்த எமிலியா ரொமான்யா எஃப் ஒன் கிராண்ட் பிரி பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் வடக்குப் பகுதி மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
எமிலியா ரொமான்யா வட்டாரத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் குறைந்தது ஐவர் மாண்டுவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அவசரநிலையைக் கையாள்வதற்கு உதவ பந்தயத்தை ஒத்திவைக்குமாறு இத்தாலியப் போக்குவரத்து அமைச்சர் மட்டேயோ சல்வினி முன்னதாகக் கேட்டுக்கொண்டார். கடந்த திங்கட்கிழமையன்று அப்பகுதிக்கு ஆக உயரிய வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

