லக்னோ: லக்னோ சூப்பர் ஜயன்ட்சுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இன்னிங்சின் பிற்பாதியில் கவனத்தை சிதறவிட்டதாகக் கூறியுள்ளார் அக்குழுவின் தலைவர் ரோகித் சர்மா. இந்த ஆட்டத்தில் வெறும் ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்விகண்டது.
முதலில் பந்தடித்த லக்னோ மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது மும்பை.
மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவித்ததும் பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி கவனத்துடன் விளையாடியதும் லக்னோவிற்குப் பெரிதும் கைகொடுத்தன.
"திடல் பந்தடிப்பாளர்களுக்கு உகந்த நிலையில் இருந்ததை நாங்கள் நன்கு அறிந்தோம். வெற்றி இலக்கை நாங்கள் நிச்சயமாக அடைந்திருக்கலாம். ஆனால், இன்னிங்சின் பிற்பாதியில் கோட்டைவிட்டுட்டோம்," என்று ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற நேர்காணலில் குறிப்பிட்டார் சர்மா.

