திருக்குறளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டது இசை நாட்டிய நாடகம் 'ஆயிரத்தில் ஒருவன்'. 'மாஸ்க் ஸ்டுடியோஸ்', கலாமஞ்சரி ஏற்பாட்டில் வளர்தமிழ் இயக்கம், லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு இம்மாதம் 14ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவருமான இரா. தினகரன் வருகை புரிந்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் பழங்கால இலக்கியங்களை அனைவரும், குறிப்பாக, இளைய தலைமுறையினர் அனைவரும் புரிந்துகொண்டு ரசிக்கும் வகையில் இசை நாட்டிய நாடகமாக படைக்கப்பட்டது.
"திருவள்ளுவரால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் தமிழ்ச் சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாகும். இது சிறந்த இலக்கிய மதிப்புடைய ஒரு படைப்பு மட்டுமல்ல. குறள் அமுது திருக்குறளின் சாராம்சத்தோடு அன்றாட வாழ்விற்கு அவசியமான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது," என்று மாஸ்க் ஸ்டுடியோஸின் நிர்வாக இயக்குநர் திரு கார்த்திக் அழகப்பன் கூறினார்.
"நிபுணத்துவம் வாய்ந்த இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் தனித்துவமிக்க வாய்ப்பு கிட்டியது. இப்படைப்பு இன்றைய சமுதாயத்திற்குத் திருக்குறளின் தொடர்பைக் காண்பிக்கும் என்று நம்புகிறேன். பாரம்பரிய கலை வடிவங்களான பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் போன்றவற்றைப் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்," என்று நடனமணி நிரஞ்சனா ராமசாமி, 18, கூறினார்.
"திருக்குறளில் 133 அதிகாரங்கள், 1,330 குறள்கள் இருக்கின்றன என தெரியுமே தவிர பலருக்கு அதன் முழுமையான அர்த்தம் புரிவதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் குழந்தை பருவத்திலிருந்து அந்தக் குழந்தை வளர்ந்து வாலிபனாகும் வரை திருக்குறள் உணர்த்தும் வாழ்க்கை விழுமியங்கள் அருமையாக கலைஞர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளன," என்று திரு இரா. தினகரன் கூறினார்.
கருணாநிதி துர்கா

