சிங்கப்பூரின் மறைந்த கலப்பு தற்காப்புக் கலை வீராங்கனையான விக்டோரியா லீயின் பெயரில் ஆண்டுதோறும் விருது ஒன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரின் பெயரில் ஓர் உபகாரச் சம்பளத் திட்டம் தொடங்கப்படும், அவருக்கான நினைவு நாள் அனுசரிக்கப்படும்.
'விக்டோரியா லீ அவார்ட்' என்றழைக்கப்படும் புதிய விருதை ஒன் சாம்பியன்ஷிப் சிறந்த விளையாட்டாளருக்கு ஆண்டுதோறும் வழங்கும். கலப்பு தற்காப்புக் கலைக்கான இவோல்வ் உடற்பயிற்சிக் கூடம் வாகை சூடும் இலக்குடன் செயல்படும் இளம் விளையாட்டாளர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி விக்டோரியா லீயின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும்.
நேற்று முன்தினம் இந்த அறிவிப்புகள் இடம்பெற்றன. விக்டோரியா லீ உயிருடன் இருந்திருந்தால் அன்று அவரின் 19வது பிறந்தநாளாக இருந்திருக்கும்.

