அருகி வரும் உயிர்களை அரவணைப்போம்

4 mins read
158dd351-7d4f-4878-a67a-1f0f573ac363
-
multi-img1 of 3

சிங்­கப்­பூ­ரின் கடைசி சிறுத்தைப் பூனைகள்

மலா­யன் புலி­களைச் சிங்­கப்­பூர் கிட்­டத்­தட்ட நூறாண்­டு­க­ளுக்கு முன்­னர் இழந்­தது. தற்­போது, சிங்­கப்­பூ­ரின் கடைசி காட்­டுப்பூனை­யாக இருக்­கும் 'லெப்­பர்ட் கேட்ஸ்' வாழ்­வி­யலைப் பல கார­ணி­கள் அச்­சு­றுத்தி வரு­கின்­றன. கடைசி நில­வ­ரப்­படி, 50 சிறுத்தைப் பூனை­கள் மட்­டுமே இங்கு எஞ்சி உள்­ளன.

காடு­கள் அழிக்­கப்­ப­டு­வது, காட்­டுப் பகு­தி­களை நாம் கூறு போட்டுப் பிரித்­தி­ருப்­பது, சாலை விபத்­து­கள் உள்ளிட்ட அம்சங்கள் இவற்றைப் பெரி­தும் பாதித்து வரு­வ­தா­கக் கூறி­னார், 'சுவேக்' எனப்படும் சிங்கப்பூர் காட்டுப் பூனை நடவடிக்கைக் குழு­வின் தொண்­டூ­ழி­யர் திரு­வாட்டி சத்யா திவாரி, 58.

"நமது காடு­கள், இயற்­கைக் காப்­ப­கங்­களில் சில விரை­வுச்­சாலை­களால் பிரிக்­கப்­பட்டிருப்பது சிறுத்­தைப் பூனை போன்ற வன விலங்குகளின் இயல்பு வாழ்க்கை யில் குறுக்­கி­டு­கிறது. இத­னால் சாலைக்கு ஓடி வரும் இவை, விபத்­தில் சிக்கும் ஆபத்து பன்­மடங்­கா­கி­விட்­டது," என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் சாலை விபத்­து களில் மாண்ட மிரு­கங்­க­ளின் எண்­ணிக்கை 2021ல் 194ஆக உயர்ந்­தது; 2016ஐ காட்­டி­லும் இது இரு­ம­டங்­கா­கி­யது. பற­வை­கள், பாலூட்டி விலங்­கு­கள் முத­லி­யவை இவற்­றில் அடங்­கும்.

"சிறுத்­தைப் பூனை­கள் அள­வில் சிறி­யவை. இரவு நேர மிரு­கங்­க­ளான இவற்றை எளி­தில் காண இய­லாது. அவற்­றின் நல­னைப் பேணிக் காப்­ப­தில் இத்­த­கைய சிக்­கல்­கள் உள்­ளன," என்­றார் திரு­வாட்டி சத்யா. கடை­சி­யாக சிறுத்தைப் பூனை­யா­னது 2018ல் மண்­டாய் பகு­தி­யில் காணப்­பட்­டது.

சுவேக் குழு­வில் இணைந்­துள்ள திரு­வாட்டி சத்­யா­வின் மகள் அலிஷா சந்­தி­ரா­வும் இம்­மி­ரு­கங்­க­ளைப் பாது­காப்­ப­தில் கூடு­தல் கவ­னம் தேவைப்­ப­டு­வ­தாக உணர்­கி­றார்.

"மிரு­கங்­கள் அதி­க­மாக கடக்­கும் சாலைப் பகு­தி­களில் எச்­ச­ரிக்கைப் பல­கை­க­ளு­டன் சாலை வேக வரம்­பு­கள் இருந்­தால் மிரு­கங்­கள் தொடர்­பி­லான சாலை விபத்­து­களைத் தவிர்க்­க­லாம்," என்­றார் இவர்.

சிறுத்­தைப் பூனை­கள் குறித்து விழிப்­பு­ணர்­வூட்­டு­வ­தி­லும் மலாயன் காட்­டுப்பூனை நலக் குழுவினருடன் இணைந்து விலங்கு, வனப் பாது­காப்பு முயற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தி­லும் அம்மா-மகள் இரு­வ­ரும் பங்கேற்றுள்ளனர்.

வீதிக்கு வரும் நீர்நாய்கள்

கொவிட்-19 சூழ­லில் அதி­கம் பொது­வில் காணப்­பட்­டன நீர் நாய்கள். பார்க்க அழ­காக இருக்­கும் இவற்றை மக்­கள் ஒரு­பு­றம் ரசித்­தா­லும் வீட்­டில் வளர்க்­கும் மீன்­க­ளைத் தின்­ற­து, மனி­தர்­களைத் தாக்­கி­யது போன்ற கார ணங்களுக்காக சிலர் அவற்றை வெறுக்­க­வும் செய்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், அவற்­று­டன் ஒத்துவாழ்­வ­தற்கு மனி­தர்­கள் இணங்கவேண்­டும் என்­றார் 'ஏக்­கர்ஸ்' எனப்­படும் விலங்கு அக்­கறை ஆராய்ச்சி, கல்­விச் சங்­கத்தின் துணை தலைமை நிர்வாகி அன்­ப­ரசி பூபால், 40.

"நாம் எவ்­வாறு பிள்­ளை­களை ஆபத்­து­க­ளி­லி­ருந்து பாது­காக்­கி­றோமோ அதேபோல் நீர் நாய்கள் தங்­க­ளின் குட்­டி­களைக் காப்­ப­தற்கே பெரும்­பா­லும் மனி­தர்­களைத் தாக்­கக்கூடும்," என்று அவர் விளக்­கி­னார்.

ஒரு மில்­லி­யன் மரங்­களை நடும் சிங்­கப்­பூ­ரின் இயக்­கத்­தை­யும் குறிப்­பிட்ட அவர், மக்­களுக்கு மிக அரு­கில் இயற்கை நெருங்­கும்­போது வன­வி­லங்­கு­கள் நமது அன்­றாட வாழ்­வி­ல் பங்­கு­கொள்­ளக்கூடும் என்று கூறி­னார்.

நீர் நாய்கள் அவ்­வப்­போது செய்­யும் நாசத்­தைத் தவிர்ப்­பதற்கு அவற்றை முழு­மை­யாக அகற்ற வழி தேடு­வது தவறு என்­பதை வலி­யு­றுத்­தி­னார் அன்­ப­ரசி. வீடு­க­ளுக்­குள் நீர் நாய் களோ, சிவெட் விலங்­கு­களோ புகும்­போது அவை வரா­மல் இருக்க தடுப்­பு­களை ஏற்­ப­டுத்­த­லாம் என அவர் பரிந்­து­ரைத்­தார்.

"எல்லா வன­வி­லங்­கு­க­ளை­யும் பாது­காப்­ப­தற்கு நாம் உகந்த முடி­வு­களை எடுக்கவேண்­டும். நாம் உண்ணும் உணவு, பயன்­ப­டுத்­தும் பொருள்­கள், விலங்­கு­க­ளைத் தடுக்க பயன்­ப­டுத்­து­பவை ஆகி­யவை அனைத்­தும் இயற்­கைக்கு உகந்த வகை­யில் அமை­யு­மாறு உறு­திப் ­ப­டுத்­து­வது அவ­சி­யம்," என்­றார் அன்­ப­ரசி.

வன­வி­லங்­கு­க­ளுக்கு உண­வளிப்­ப­தில் தீங்கு ஒன்­று­மில்லை என்று பலர் எண்­ண­லாம். ஆனால், இப்­போக்கு அவற்­றின் எண்­ணிக்­கை­யைப் பெருக்­கு­வதைச் சுட்­டிய அன்­ப­ரசி, இறு­தி­யில் அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் விலங்கு­களை அழிக்­க­வேண்டி வரும் என்­பதை மன­தில்கொள்ளும்படி கூறி­னார்.

சாலை விபத்­து­க­ளைக் குறைப்­பதற்கு 'ஏக்­கர்ஸ்' பல முயற்­சி­களைத் தொடர்ந்து எடுத்து வரு­கிறது. நிலப்போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தி­டம் இவ்­வி­பத்­து­கள் அதி­கம் நிக­ழும் பகு­தி­களில் வேக வரம்­பு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆலோ­சித்­தும் வரு­கிறது.

சவால்மிக்க கிளி பாதுகாப்பு

விலங்­கு­நல மருத்­து­வச் சேவை­யின் தக­வல்­படி, நான்கு கிளி இனங்­க­ளைத் தவிர்த்து மற்ற கிளி இனங்­கள் அனைத்­துமே அருகி வரும் அபா­யத்­தில் உள்­ளவை. சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­க­ள­வில் கிளி­களை வீடு­களில் வளர்த்து வரும் நிலை உள்ளது.

கிளி­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தில் உள்ள சவால்­களை அறி­வார் திரு­மதி பிர­மிளா கிருஷ்­ண­சாமி. கடந்த சில ஆண்­டு­க­ளாக காப்­பாற்­றப்­பட்ட அல்­லது தத்­தெ­டுக்­கப்­பட்ட நான்கு கிளி­களை கண­வ­ரு­டன் சேர்ந்து அவர் வளர்த்து வரு­கி­றார்.

"பற­வை­க­ளைப் பரா­ம­ரிப்­பது மிகக் கடி­னம். இயல்­பா­கவே வனப்­ப­கு­தி­யில் தழைக்­கும் பறவை இனங்­க­ளுக்கு அதிக கவ­ன­மும் செறி­வூட்­ட­லும் தேவை," என்­றார் நாய், பூனை, மீன் எனப் பல்­வகை மிரு­கங்­களை வீட்­டில் வளர்த்­துள்ள 33 வயது திரு­மதி பிர­மிளா.

கடை­க­ளி­லி­ருந்து பற­வை­களை வாங்­கு­வ­தில் திரு­மதி பிர­மி­ளா­விற்கு நம்­பிக்கை இல்லை. அவை கட்­டா­ய­மான இனப்­பெருக்­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வை­யாக இருக்­க­லாம். அதற்கு பதி­லாக கிளி­க­ளைத் தத்­தெ­டுத்­துள்­ளார் இவர்.

சிங்­கப்­பூ­ரர்­களில் 67 விழுக்­காட்­டி­னர் தாங்­கள் வைத்துள்ள கிளி இனம் எத்­த­கைய ஆபத்­தில் உள்­ளது என்­பதை அறி­யா­மல் உள்ளதாக கேம்ப்­ரிட்ஜ் பல்­கலைக் ­க­ழக அறிக்கை சுட்­டி­யது. பற­வை­ கள் வளர்ப்­போர் அவற்­றின் தேவை­களைத் துல்­லி­ய­மாக அறிந்­து­கொள்­வ­தற்கு இத்­த­கைய விவரங்­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இவ்­வாண்­டின் தொடக்­கத்­தில் பணிப்­பெண் ஒரு­வ­ரால் ஒரு­வகை பச்­சைக்­கிளி எச்­சில் ஊட்­டப்­பட்டு துன்­பு­றுத்­தப்­பட்ட காணொளி இணை­யத்­தில் பர­வியது. அக்­கி­ளி­யைக் காப்­பாற்­றிய சிங்­கப்­பூர் கிளிச் சங்­கம், பொது­மக்­க­ளின் இத்­த­கைய போக்­கு­கள் விலங்குப் பரா­ம­ரிப்பு குறித்த கூடு­தல் விழிப்­பு­ணர்­வுக்­கான தேவை­யைக் காட்­டு­வதாகத் தெரி­வித்­தது.

ஆ. விஷ்ணு வர்தினி

உலகளவில் அருகிவரும் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் நாளாக மே 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதிகரிக்கும் நகரமயமாதல் காரணமாக நகர்ப் பகுதிகளில் காணப்படும் காட்டு விலங்குகளைச் சிலர் அன்றாட வாழ்வியலுக்குக் குறுக்கீடாகக் கருதுகின்றனர். மாறாக, இவ்விலங்குகளை அரவணைத்து, அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை விலங்கியல் ஆதரவாளர்களும் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவினாலும் வனவிலங்குப் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடும் எனும் விழிப்புணர்வை ஊட்ட இவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.