லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் முடிசூடா மன்னனாக மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து திகழ்கிறது.
கடந்த ஆறு பருவங்களில் ஐந்து முறை அது லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
இம்முறை லீக் பருவம் முடிவதற்கு முன்பே கிண்ணம் சிட்டியின் வசமானது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் குழுவிடம் ஆர்சனல் தோல்வி அடைந்த பிறகு கிண்ணம் சிட்டிக்குச் சொந்தம் என்பது உறுதியானது.
நேற்று மாலை நிலவரப்படி 35 ஆட்டங்களில் களமிறங்கி 85 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தது சிட்டி. சிங்கப்பூர் நேரப்படி இரவு 11 மணிக்கு அது செல்சியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் அதற்குக் கூடுதலாக மூன்று புள்ளிகள் கிடைத்திருக்கும்.
ஆனால் தோல்வி அடைந்து ஒரு புள்ளிகூட பெறாவிட்டாலும் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆர்சனலால் அதை முறியடிக்க முடியாது.
ஆர்சனல் இதுவரை 37 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. 81 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் அதற்கு ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.
எனவே, ஆர்சனல் அதன் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றாலும் அக்குழுவால் சிட்டியை எட்ட முடியாது.
அபு தாபியின் ஷேக் மன்சூர் ஸாஹீத் அலன் நயான் 2008ஆம் ஆண்டில் சிட்டியை வாங்கியதிலிருந்து அக்குழு ஏழு முறை பிரிமியர் லீக் பட்டத்தை வென்றுவிட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியன்று ஸ்பர்ஸ் குழுவிடம் சிட்டி தோல்வி அடைந்தது.
ஆனால் அடுத்த ஆட்டங்களில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு 40 புள்ளிகளை சிட்டி குவித்தது. ஆர்சனலுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் சிட்டி வாகை சூடியது.
இனி சிட்டி அதன் கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மொத்தம் 94 புள்ளிகளுடன் அது போட்டியை நிறைவு செய்யும்

