போர்ன்மத்: அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை மான்செஸ்டர் யுனைடெட் நெருங்கியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது போர்ன்மத் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்றது.
மத்தியத் திடல் ஆட்டக்காரர் கேஸ்மிரோவின் சாகச கோல் யுனைடெட்டுக்கு வெற்றியைத் தந்தது.
இதன் விளைவாக 69 புள்ளிகளுடன் யுனைடெட் லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள நியூகாசலும் 69 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் யுனைடெட்டைவிட அது கூடுதல் கோல்கள் போட்டுள்ளது.
இந்நிலையில், நியூகாசலும் யுனைடெட்டும் இன்னும் ஒரு புள்ளி எடுத்தால் போதும், சாம்பியன்ஸ் லீக்கில் இடம்பெறுவது உறுதியாகிவிடும்.
இருகுழுக்களுக்கும் தலா இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் ஓர் ஆட்டத்திலாவது குறைந்தது சமநிலை கண்டால் இலக்கை அடைந்துவிடலாம்.
நியூகாசல் நாளை லெஸ்டர் சிட்டியுடன் மோதுகிறது. ஆனால் இந்த ஆட்டம் அதற்குச் சவால்மிக்கதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குக் காரணம் லெஸ்டரின் நிலை. அது தற்போது பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது.
லீக் போட்டியில் மொத்தம் 20 குழுக்கள் போட்டியிடுகின்றன. இதில் கடைசி மூன்று இடங்களில் போட்டியை முடித்துக்கொள்ளும் குழுக்கள் அடுத்த பருவம் இரண்டாம் நிலை லீக் போட்டிக்குத் தள்ளப்படும்.
எனவே, அத்தகைய ஒரு நிலை தனக்கு ஏற்படாமல் இருக்க நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் லெஸ்டர் மிகுந்த முனைப்புடன் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.
லெஸ்டர் சிட்டியைச் சமாளித்து நியூகாசலால் குறைந்தது ஒரு புள்ளியாவது எடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
யுனைடெட் அதன் அடுத்த ஆட்டத்தில் செல்சியுடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது.
செல்சி தற்போது லீக் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் லிவர்பூலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்டய் வில்லாவுக்கும் லிவர்பூலுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஓர் ஆட்டம் எஞ்சியிருக்க 66 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது லிவூர்பூல்.

