ஷாங்காய்: உலகக் கிண்ண வில்வித்தையில் (நிலை2) இந்தியா வாகை சூடி தங்கம் வென்றுள்ளது.
இப்போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றது.
இதில் நேற்று முன்தினம் நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜோங்ஹோ-ஓ யோயூன் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஓஜஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி 156-155 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கப்
பதக்கத்தை வென்றது.
கடந்த மாதம் துருக்கியில் நடந்த உலகக் கோப்பை (நிலை 1) போட்டியிலும் இந்திய இணை தங்கம் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளிக் கணக்கில் இரண்டு முறை உலக வெற்றியாளரும் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரருமான நெதர்லாந்தின் மைக் கிளாசருக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதுவே 19 வயது பிரதமேஷ் ஜவகர் உலகக் கிண்ணப் போட்டியில் வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

