ஆ. விஷ்ணு வர்தினி
இந்திய பலகாரமான ஜிலேபி, அகல் தீபங்கள் போன்றவற்றின் வடிவமைப்புகள் லசால் கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் கலைப்படைப்புகளாகி உள்ளன. இந்திய பண்பாட்டை வடிவமைப்பு மூலம் நவீனமயமான கண்ணோட்டத்தில் காட்சிப்படுத்துகிறது லசால் கல்லூரியின் 'புரோஜெக்ட் சூர்யா'.
நீடித்த நிலைத்தன்மை கொண்டவையாக, இயற்கைக்கு உகந்தவையாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பல இன கலாசாரங்களிலும் காணப்படும் தீபங்கள், இந்தியப் பலகாரங்கள் முதலிய பண்பாட்டுக் கூறுகளை அன்றாட வாழ்வில் இடம்பெறுபவையாக பிற இன மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
மாணவி லிம் கே லியின் 'ஸ்னெக்' எனும் மின்விளக்கு படைப்பு அவரை வெகுவாக ஈர்த்த ஜிலேபியின் வடிவத்தையும் நிறத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. பகிர்ந்துண்ணும் கலாசாரத்தையும், கவலையற்ற குதூகலமான சிறுபிராயத்தையும் ஜிலேபி நினைவூட்டுகிறது என்றார் அவர்.
"மாறி வரும் சூழலில் இத்தகைய வடிவமைப்புகளின்மூலம் பண்பாட்டுக்கூறுகளை நீண்டகாலத்துக்குத் தக்கவைக்கலாம் என்று நம்புகிறேன்," என்றார், நண்பர்கள், ஆராய்ச்சியின் வாயிலாக இந்திய பண்பாட்டில் நாட்டம் கொண்டுள்ள கே லி.
தீபங்களை தமது மேசை மின்விளக்கு படைப்புக்காக தேர்ந்தெடுத்திருந்தார் மாணவி லோ ஹோ யின். வளரும் பருவத்தில் சீனாவில் தாம் கண்ட எண்ணெய் விளக்குகள் இந்திய கலாசாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதை அறிந்தபோது அவர் வியப்புற்றார். சூரிய சக்தியில் எரியும் அவரின் மேசை மின்விளக்கு, தீபத்தின் வடிவத்தைத் தழுவியுள்ளதோடு, மெல்லிய ஒளியை உமிழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹோ யின் விவரித்தார்.
சிங்கப்பூரில் வாழும் பல இன மக்களின் கலாசாரங்களும் வாழ இத்தகைய நவீன வடிவமைப்பு முயற்சிகள் கைகொடுக்கும் என்பது அவரின் எண்ணம்.
இவர்கள் உட்பட, மொத்த 13 மாணவர்கள் வடிவமைத்த நவீன வடிவமைப்புப் படைப்புகள் மிலன் நகரில் உள்ள பிரையன்&பேரி வளாகத்தில் கடந்த மாதம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
vishnuv@sph.com.sg

