‘தி எவ்ரிடே மியூசியம்’ என்ற பொதுக் கலைத் திட்டம் சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தினால் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தஞ்சோங் பகார் வட்டாரத்திலும் ரயில்பாதை சுற்றுவட்டாரத்திலும் பல புதிய சமகால கலைப் படைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நம் தினசரி வாழ்க்கையில் கலை உணர்வைப் புகுத்தி சிங்கப்பூரர்களிடையே புத்தாக்க சிந்தனையைத் தூண்டி அவர்களையும் கலைப் படைப்புகள் உருவாக்க ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைகிறது. பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கலைப் படைப்புகள் ஒன்பது சிங்கப்பூர் கலைஞர்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களைச் சித்திரிக்கின்றன.
தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க், எவர்ட்டன் பார்க், டக்ஸ்ட்டன் பிளென் பார்க் என தஞ்சோங் பகார் வட்டாரத்தில் ‘தஞ்சோங் பகாரின் கலைப் படைப்புகள்: நம் வட்டாரத்தில் கலையுடன் இணைந்திருப்போம்’ (போர்ட்ரெய்ட்ஸ் அஃப் தஞ்சோங் பகார்: என்கவுன்டர்ஸ் வித் ஆர்ட் இன் தி நெய்மர்ஹூட்) என்ற கருப்பொருளில் ஆறு கலைப் படைப்புகள் உள்ளன. மேலும், கம்போங் பாரு பேருந்து முனையத்திலும் வெசெக்ஸ் வட்டாரத்திலும் ‘சிங்கப்பூர் டீவியேஷன்: வன்டர் வித் ஆர்ட் த்ரு தி ரெய்ல் கோரிடார்’ என்ற கருப்பொருளில் மூன்று கலைப் படைப்புகள் உள்ளன.
நம் அன்றாட வாழ்க்கையில் அதிகம் சிந்திக்காத விஷயங்களைப் பற்றிய கலைஞர்களின் ஆழமான சிந்தனைகளால் உருவான கலைப் படைப்புகள் இவை. உதாரணமாக மனிதர்கள் நாம் நடைப்பயிற்சியுடன் கொண்ட உறவைப் பற்றிப் பார்வையாளர்களுக்குக் கூறுகிறது டான் பின் பின்னுடைய 27 நிமிட காணொளிப் படைப்பு. இந்தப் புதிய கலைப் படைப்புகள் அனைத்தும் 2025ஆம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
கருணாநிதி துர்கா