தேயிலையின் உற்பத்தியிலும் தேநீர் பருகுவதிலும் நீடித்த நிலைத்தன்மை பழக்கத்தை கடைபிடிக்க மக்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அனைத்துலக தேநீர் தினம் இம்மாதம் 21ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. அன்றாடம் சுவைத்து குடிக்கும் இந்த பானத்தைக் கொண்டாடவும் பசி, வறுமை போன்ற உலகப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதில் தேநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் அமைந்துள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள் வளரும் வேளையில் தேநீர் உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளின் மக்கள் வறுமையிலும் பசியிலும் தவிப்பதை ஐக்கிய நாட்டு நிறுவனம் ஓர் அறிக்கையில் அறிவித்திருந்தது. சீனாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக அருந்தப்பட்ட தேநீர் இப்போது உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் அருந்தப்படுகிறது. தேநீர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் பின்பற்றப்படும் பலவிதமான தேநீர் செய்முறைகளை தமிழ் முரசு அறிந்து வந்தது.
புதினா, இஞ்சி, ரோஜா பூ இலைகள் போன்றவற்றை இடித்து கருப்பு அல்லது ஜப்பானிய வகை பச்சை தேநீரில் (கிரீன் டீ) கலந்து குடிப்பது 26 வயது ஆதவனுக்கு வழக்கம். நீண்டகாலமாக வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்கொண்ட இவர் தனது பாட்டியிடம் இந்த செய்முறையைக் கற்றுக்கொண்டார்.
தேநீரில் காப்பியைக் கலந்து வெங்காயம், இஞ்சி, ரோஜா செடியின் இலைகள் போன்றவற்றை மூன்று நாள்களுக்கு ஊற வைத்து, வடிகட்டிய பிறகு உருவாகும் கஷாயத்தை வாரத்திற்கு ஒருமுறை தலையில் தேய்த்துக்கொள்வாராம் 60 வயது அஞ்சலை தேவி. தமிழ் முரசு சந்தித்த தேநீர் கலைஞர்களில் இவர்கள் ஒருசிலரே.
ரச்சனா வேலாயுதம்