மோனலிசா
கூர்மையான உயர் குதிகால் காலணியை அன்றாடம் அணிபவர்களுக்கு எலும்பு தேய்மானம், மூட்டழற்சி, இடுப்பு வலி, முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கணுக்கால், கெண்டைக்கால் தசைகளில் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் ‘ஃபிரன்டியர்ஸ்’ எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இளம் வயதிலிருந்தே நான் சற்று குள்ளமாக இருப்பதால் சக மாணவியர் என்னைக் கேலி செய்துள்ளனர். அதனால் முடிந்த அளவு நான் உயர் குதிகால் காலணிகளையே அணிகிறேன். பல நேரங்களில் குதிகாலும் கணுக்காலும் வலித்தாலும் கூட இந்த காலணிகள் பொது இடங்களில் மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது,” என்றார் பல்கலைக்கழக மாணவியான தர்ஷினி ராஜேஷ், 20.
“அலுவலகங்களில் இது போன்ற காலணிகளையே பெண்கள் பெரும்பாலும் அணிகின்றனர். அலுவலக உடையின் ஓர் அங்கமாக கருதப்படும் உயர் குதிகால் காலணியை அணியாவிட்டால் தனித்து தெரிவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. அதனால், அலுவலக வாயில் வரை வசதியான காலணியையும் அலுவலகத்திற்குள் உயர் குதிகால் காலணிகளையும் அணிவதை வழக்கமாக வைத்துள்ளேன்,” என்று கூறினார் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரியும் ராதிகா சிவபாலன், 37.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் சந்தியா நாராயணன், 28 “உயர் குதிகால் காலணி அணியும்போது நம்மையே அறியாமல் மிடுக்காக நடப்போம். பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீரமாகவும் தோன்றும். அதனாலேயே அதிகம் கால்கள் வலிக்காத பஞ்சு பொருத்திய உயரமான காலணிகளை அணிகிறேன்“ என்று கூறினார்.
இது குறித்து தனியார் சிகிச்சையகத்தில் பணிபுரியும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரமேஷ் சுப்ரமணியம் கூறுகையில், “இதுபோன்ற காலணிகளை தொடர்ந்து அணிவதால் குதிகால், கணுக்கால், மூட்டு, இடுப்பு, முதுகெலும்பு போன்ற பல்வேறு உடல் பாகங்கள் பாதிக்கப்படும். லேசான வலியில் ஆரம்பிக்கும் இந்த பாதிப்பு பல சூழல்களில் அறுவை சிகிச்சை நிலை வரை இட்டுச் செல்லும்,” என்று கூறினார்.
மேலும் தினமும் பல மணி நேரம் தொடர்ந்து அணிவதால் பலருக்கு கால் விரல்களின் வடிவமே நாளடைவில் மாறிவிடும் அபாயமும் உள்ளது.
அதிலும் கூர்மையான உயர் குதிகால் காலணிகள் அணிபவர்களுக்கு மூட்டழற்சி, இடுப்பு எலும்பு அழற்சி போன்ற பல்வேறு நாள்பட்ட உடற்கோளாறுகளும் ஏற்படுவதுண்டு என்றும் சொன்னார்.
உடலின் மொத்த எடையையும் குறுகிய அடித்தள வடிவமுடைய இவ்வகை காலணிகள் மீது இறங்குவதால் பலருக்கு கெண்டைக்கால் தசைகளின் நீளம் குறையவும், கணுக்காலின் பின்புறத் தசைகளில் வீக்கம் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.
ஒருமுறை உயர் காலணி அணிந்த பெண்மணி ஒருவர் வாடகை வாகனத்திலிருந்து இறங்கும் போது நிலைதடுமாறி விழுந்ததால் எலும்புமுறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு பல காலம் அவதியுற்ற சம்பவத்தையும் திரு ரமேஷ் நினைவுகூர்ந்தார்.
அண்மைய காலங்களில் ஆண்களும் இதுபோன்ற உயரமான காலணிகளை அணிகின்றனர் என்றும் தங்களுடைய உயரத்திற்கும் எடைக்கும் ஏற்ற காலணிகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே சிறந்தது என்றும் கூறினார் திரு ரமேஷ்.
மேலும் கூடுமானவரை உயர் குதிகால் காலணிகளைத் தவிர்ப்பது நல்லது என்றும் ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கும் மேல் அணிவது அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.