கதிர்வீச்சு சிகிச்சை முறையில் ஏற்பட்டு வந்துள்ள பல்வேறு முன்னேற்றங்கள் சிகிச்சையை மேம்படுத்தி இருப்பதுடன் பக்க விளைவுகளையும் குறைத்துள்ளன.
கருணாநிதி துர்கா
மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவு முறைகள், மாசுபட்ட சுற்றுச்சூழல் போன்றவற்றால் உலக அளவில் புற்றுநோய்ப் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனினும் இன்றைய நவீன தொழில்நுட்பம், புற்றுநோய்க்குத் தரப்படும் கதிர்வீச்சு சிகிச்சையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் அதிநவீனமான சிகிச்சை முறையாக ‘புரோட்டோன் சிகிச்சை’ முறை உள்ளது.
மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை வழங்க ஏதுவாக $78 மில்லியன் செலவில் புதிய புரோட்டோன் சிகிச்சை மையம் திறக்கப்படவுள்ளது.
தென்கிழக்காசியாவின் தனியார் மருத்துவமனைகளில் புரோட்டோன் சிகிச்சை மையம் கொண்டுள்ள முதல் மருத்தவமனை இது.
இந்த புதிய வசதியின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து வயது நோயாளிகளுக்கும் மேம்பட்ட சிகிச்சை வழங்க முடியும்.
இதற்கு முன்னர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் புரோட்டோன் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
கதிர்வீச்சு சிகிச்சையின் மிகவும் மேம்பட்ட வடிவங்களில் ஒன்றான புரோட்டோன் சிகிச்சையானது, கட்டிகளை மிகவும் துல்லியமாகத் தாக்குகிறது. சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
மூளை, கண்கள் போன்ற இடங்களில் ஏற்படும் கட்டிகளை அதிக துல்லியத்துடன் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சை செய்வதை சுலபமாக்குகிறது இவ்வசதி.
இச்சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புற்றுநோய் உயிரணுக்கள் மட்டும் அழிக்கப்படுவதால், ஆரோக்கியமான திசுக்கள், உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
புரோட்டோன் சிகிச்சையினால் புற்றுநோய் சிகிச்சைக்கான பக்க விளைவுகள் குறையும்.
“சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் உலகளவிலும் மரணத்திற்கான முக்கிய காரணமாக அமைகின்றது புற்றுநோய். புற்றுநோய் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த புரோட்டோன் சிகிச்சை மையம் இப்பாதிப்புகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் உள்ளது,” என்று மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பீட்டர் சாவ் கூறினார்.
“மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை வசதியை இங்கு வழங்க முடிவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகள் தனியாக இல்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று ‘ஐஎச்எச் ஹெல்த்கெர்’யின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரேம் குமார் நாயர் கூறினார்.
கதிர்வீச்சு சிகிச்சை
எக்ஸ்-ரே கருவியின் துணையுடன் கதிர்வீச்சுப் பொருள்களை உடலுக்குள் அனுப்பிப் புற்றுநோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறையே கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியோதெரபி).
மனித உடலில் நேரடி விளைவையும் மறைமுக விளைவையும் இந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. நேரடி விளைவாக, உடல் திசுக்களின் மரபணுக்கூறுகள் (டிஎன்ஏ) அழிகின்றன. மறைமுக விளைவாக புற்றுநோய் செல்கள் அழிகின்றன. புற்றுநோய் அணுக் கள் மீண்டும் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதே கதிர்வீச்சு சிகிச்சையின் முக்கிய நோக்கம்.
கதிர்வீச்சில் வெளிக்கதிர் வீச்சு, உட்கதிர் வீச்சு என இரு உட்பிரிவுகள் உண்டு.
வெளிப்புறத்திலிருந்து தோல் வழியாக நோயாளியின் உடலுக்குள் கதிர்களைச் செலுத்தி, புற்றுநோய் அணுக்களை அழிப்பதே வெளிக்கதிர் வீச்சு.
உட்கதிர் வீச்சு சிகிச்சையில் கதிர்வீச்சு தோல் வழியாகச் செல்வதில்லை. பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுக்கு வெளிக்கதிர் வீச்சு கொடுக்கப்பட்ட பிறகு, உட்கதிர் வீச்சு தரப்படுகிறது. உதாரணம், உணவுக்குழாய்ப் புற்று, கருப்பைவாய்ப் புற்று.
புதிய கதிர்வீச்சு முறைகள்
பழைய முறை கதிர்வீச்சு சிகிச்சையை ‘2டி ரேடியோதெரபி’ என்பார்கள். இதில் அதிக அளவு கதிர்வீச்சைத் தரவேண்டி இருந்தது. அது புற்றுள்ள இடத்தின் அருகில் இருக்கும் திசுக்களையும் அழித்தது. அதனால் நோயாளிக்கு வாயில் புண் ஏற்படுவது, தலைமுடி உதிர்வது போன்ற பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.
இதைத் தவிர்க்க ‘3டி கன்ஃபார்மல் ரேடியோதெரபி’ வந்தது. இந்த சிகிச்சை முறையில் சி.டி. ஸ்கேன் மூலம் நோயுள்ள இடத்தை முப்பரிமாணத்தில் படமெடுத்துக்கொண்டு, கணினி உதவியுடன் நோய்க்குத் தகுந்தவாறு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிட்டு, புற்றுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கும் வகையிலும் அருகில் உள்ள ஆரோக்கிய உறுப்புகளைத் தவிர்க்கும் வகையிலும் சிகிச்சை வடிவமைக்கப்பட்டது. இதில் பக்கவிளைவுகள் குறைந்தன என்றாலும் முழுவதுமாகத் தவிர்க்க முடியவில்லை.
நவீன கதிர்வீச்சு முறையில் பலவிதம் உள்ளன.
‘கோன் பீம் சிடி’ எனும் பிரத்தியேக ஸ்கேன் துணையுடன் நோயுள்ள இடத்தை நேரடியாகப் பார்த்துக்கொண்டே கதிர்வீச்சு தரப்படும் ‘ஐஜிஆர்டி’ சிகிச்சை, மிகவும் அதிக அளவில் கதிர்வீச்சு தேவைப்படும் புற்றுநோய்களுக்கு ‘சைபர் நைஃப்’ எனும் கருவி கொண்டு அளிக்கப்படும் ‘எஸ்பிஆர்டி’ சிகிச்சை போன்ற நவீன கதிர்வீச்சு சிகிச்சை முறைகளும் உண்டு.
புரோட்டோன் சிகிச்சை
‘புரோட்டோன் சிகிச்சை’ என்பது அதிநவீனமானது. ‘புரோட்டோன் பீம்’ எனப்படும் கருவிகொண்டு இந்தக் கதிர்கள் வெளியேற்றப்படுகின்றன.
இவை பென்சில் முனை போன்று மிகக் கூர்மையாகப் புற்றுள்ள இடத்தை மட்டுமே தாக்கி அழிக்கக்கூடியவை. இவற்றின் பயணப்பாதையில் முன்னும் பின்னும் உள்ள மற்ற நல்ல உறுப்புகளும் நரம்புகளும் துளியும் தாக்கப்படாமல் தப்பித்துவிடுகின்றன. அதேவேளையில் புற்றுள்ள பகுதி மிகத் துல்லியமாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படுகிறது. நோய் நன்கு கட்டுப்படுகிறது.
கூடுதல் நன்மைகள்
நுரையீரல், குடல், கண், கணையம், மார்பகம், புராஸ்டேட், மூளை, தண்டுவடம், முகத்தில் உள்ள சைனஸ் அறைகள் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு புரோட்டான் சிகிச்சை சிறந்த பலனைத் தருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கும் இது பயன்படுகிறது.
புற்றுநோய்க் கட்டிகளுக்கு மட்டுமன்றி, சாதாரண வகைக் கட்டிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. கதிர்வீச்சு சிகிச்சையின் பக்கவிளைவாக வரக்கூடிய இரண்டாம் நிலைப் புற்றுநோய் வருவதும் இதில் தடுக்கப்படுகிறது.
மேலும், புரோட்டோன் சிகிச்சையில் குறைவான அமர்வுகளே போதுமானது.
மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, போன்றவை புற்றுநோயை மட்டுப்படுத்துகின்றன. முழுமையாகவும் களைகின்றன புற்றுநோயின் வகை, இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து இந்த சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.