வரலாறு சார்ந்த ஆய்வுகளை முன்னிலைப்படுத்தும் தேசிய நூலக வாரியத்தின் ‘வரலாறுகள்’ என்ற நிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாக செட்டி மலாக்கா பற்றிய உரை இடம்பெற்றது.
சென்ற மே 23ஆம் தேதியன்று இணையம்வழி நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த செய்தியாளரான சந்தல் சஜன் வழிநடத்தினார். 1984யிலிருந்து செய்தி பக்கங்களை வடிவமைத்து வரும் இவர் 2020ல் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் லைஃப்’ பகுதியின் எழுத்தாளராக உள்ளார்.
செட்டி மலாக்கா சமூகத்தைச் சேர்ந்த அவர், தனது குடும்ப, சமூக பண்பாட்டு முறைகளைப் பற்றி விவரித்தார்.
தமது சமூகத்தின் சிறப்பு குணநலன்களையும் பழக்கவழக்கங்களையும் விவரித்த அவர், அச்சமூகத்தின் விருந்தோம்பல் முறைகளை பற்றியும் விருந்தாளிகளுக்கு இனிப்பான ரோஜா நீர், மலாய் குவே வழங்குவதை நினைவுகூர்ந்தார்.
‘அதிதி தேவோ பவ’ என்ற சமஸ்கிருத கூற்றை மையமாக கொண்டுள்ளது செட்டி மலாக்க பண்பாடு. இக்கூற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார் சந்தல் சஜன்.
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை கடவுளுக்கு ஈடாக நடத்த வேண்டும் என்பதே இக்கூற்றின் அர்த்தம்.
செட்டி மலாக்கா சமூகம் பற்றி நூல் எழுதிவரும் இவர், தனது குடும்பம் எவ்வாறு மலாய் நடைமுறைகளுடன் இந்திய நடைமுறைகளையும் பின்பற்றுகிறது என்பதைப் பற்றி விரிவாக பேசினார்.
அருகிவரும் செட்டி மலாக்கா பண்பாட்டை பற்றி அறிந்துகொள்ள அவரது உரை உதவியது.
செய்தி: கருநணாநிதி துர்க்கா