மோனலிசா
சமூக பிணைப்பையும் குடும்ப ஒற்றுமையையும் போற்றும் வண்ணம் அண்மையில் புக்கிட் பாத்தோக் அடித்தள அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற குடும்ப தின விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவ்வட்டாரவாசிகள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகள், சோப்பு தயாரிக்கும் பயிலரங்கு, கோலமிடுதல், பல்லாங்குழி, காகிதத்தால் செய்யக்கூடிய ஓரிகமி கலை பயிலரங்கு, கேளிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் இவ்விழாவில் அரங்கேறின. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும் பூ கட்டுதல், முகத்தில் வண்ணமிடுதல், ஆரோக்கிய நடனம், பாரம்பரிய சீனத் தேநீர் தயாரித்தல், 'கீ செயின்' தயாரிக்கும் பயிலரங்கு, தையல் போன்ற பெரியவர்களுக்கான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட உணவு வகைகளும் தனித்தனி சாவடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது குடியிருப்பாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. கூடுதலாக இசைக் கச்சேரிகள், நடனங்கள், சீனத் தெருக்கூத்து ஆகிய கலை நிகழ்வுகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
கடந்த சனிக்கிழமை காலை 9 முதல் இரவு 10 மணி வரை புக்கிட் பாத்தோக் சமூக மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல இன, பல சமயங்களைச் சேர்ந்த புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டு கொண்டாடினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புக்கிட் பாத்தோக் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் முரளி பிள்ளை, "புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள பல இன, பல சமய மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி நாள் முழுவதும் கொண்டாடிய இந்நிகழ்வு அவர்களுக்குள் பரஸ்பர அன்பையும் புரிந்துணர்வையும் வளர்க்கும் அடித்தளமாக அமைந்தது," என்று கூறினார்.
"சமூக மேம்பாட்டின் அடிப்படைக் கூறான குடும்பங்கள் ஒற்றுமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும். அவ்வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளிலும் கலை நிகழ்வுகளிலும் உற்சாகத்துடன் பங்குகொண்டு மகிழ்ந்தனர்," என்று கூறினார் புக்கிட் பாத்தோக் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் ராஜசேகரன் பிரகாசம், 62.
தன் இரு பிள்ளைகளுடன் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட இல்லத்தரசியான மதி கோபால், 33, "பெரும்பாலும் கைப்பேசி, தொலைக்காட்சி என நேரத்தைச் செலவிட விரும்பும் பிள்ளைகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆரோக்கியமான பொழுதுபோக்குகள். படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், ரொட்டி தயாரித்தல் போன்ற பல அங்கங்களில் என் பிள்ளைகள் பங்கேற்று மகிழ்ந்தனர்," என்றார்.
"வார இறுதியில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் மனைவி, பிள்ளைகளுடன் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் பலரை சந்தித்து நட்புகொள்ளும் வாய்ப்பாகவும் இவ்விழா அமைந்தது," என்று கூறினார் வேதியல் பொறியாளரான ஈஸ்வரன் அம்பலம், 42.

