100 மீ. ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை
திடல்தட விளையாட்டுப் போட்டிகளில் நாளுக்கு நாள் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருகிறார் சிங்கப்பூர் நட்சத்திரம் சாந்தி பெரேரா, 26.
இவ்வாண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடந்த போட்டிகளிலும் பின்னர் கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பல்வேறு சாதனைகளை சாந்தி முறியடித்திருந்தார்.
இந்நிலையில், இப்போது ஐரோப்பாவிலும் தமது சாதனை முறியடிப்புப் பயணத்தைத் தொடர்ந்து தம்மையே வியப்பில் ஆழ்த்தினார் சாந்தி.
ஜெர்மனியின் ரேலிங்கனில் நேற்று முன்தினம் நடந்த 100 மீ. ஓட்டப் பந்தயத்தை 11.26 நொடிகளில் முடித்து, தமது சொந்த தேசிய சாதனையை இவர் முறியடித்தார்.
சாந்தி ஒரே நாளில் இரண்டு முறை 100 மீ. ஓட்டத்தில் புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அதே நாளில் நடந்த 100 மீ. தகுதிச்சுற்றை 11.34 நொடிகளில் அவர் முடித்திருந்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் நடந்த போட்டியில் 11.37 நொடிகளில் இவர் நூறு மீட்டர் தொலைவைக் கடந்திருந்தார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து 100 மீட்டரில் ஐந்து முறையும் 200 மீட்டரில் மூன்று முறையும் இவர் தமது சொந்த சாதனைகளை முறியடித்துள்ளார்.
"எனக்கே வியப்பாக இருக்கிறது. ஆயினும், நான் விரும்பியதைச் செய்துகாட்டியதால் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன்," என்று தொலைபேசி வழியாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சாந்தி கூறினார்.
அடுத்ததாக சுவிட்சர்லாந்திலும் பிரான்சிலும் நடக்கவுள்ள போட்டிகளில் இவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.
பின்னர் ஜூன் 21ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பும் சாந்தி, ஜூலை 12-16 தேதிகளில் நடக்கும் ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளிலும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

