லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர்த்து, தொடர்ந்து 70வது ஆண்டாக அந்த லீக்கில் விளையாடவிருப்பதை உறுதிசெய்தது எவர்ட்டன் காற்பந்துக் குழு.
இந்தப் பருவத்தில் போர்ன்மத் குழுவிற்கு எதிரான கடைசி ஆட்டமே எவர்ட்டனின் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அமைந்தது. அந்த ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் அப்துலாயி டூக்கூரே அடித்த கோல், எவர்ட்டனின் வெற்றி கோலாக அமைந்தது.
இதன்மூலம் 'ரெலிகேஷன்' எனப்படும் தகுதியிழப்பு நிலையில் இருந்து அக்குழு தப்பித்து, 36 புள்ளிகளுடன் பட்டியலின் 17ஆம் நிலையுடன் இப்பருவத்தை முடித்தது எவர்ட்டன்.
எவர்ட்டன் குழு கடைசி நாள் வரையிலும் இத்தகைய பதற்றத்தை எதிர்கொண்டது இது முதன்முறையன்று. 1990களிலும் இப்படி இருமுறை கடைசி நாள்வரை சென்று, தகுதியிழப்பில் இருந்து அக்குழு தப்பியுள்ளது.
"அடுத்த பருவத்திலும் நீடிக்க வேண்டும் என்பதுதான் முதல் குறிக்கோளாக இருந்தது. அதனை எட்டிவிட்டோம். இனி அடுத்த பருவத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நிர்வாகியாக நான் பொறுப்பேற்ற முதல் நாளே அதற்கான பணியைத் தொடங்கிவிட்டேன். பெரும்பணியைச் செய்ய வேண்டியுள்ளது," என்றார் எவர்ட்டன் நிர்வாகி ஷான் டைக்.
ஒன்பது முறை பிரிமியர் லீக் வெற்றியாளரான எவர்ட்டன், கடந்த 2021/22 பருவத்தை 16ஆம் நிலையில் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால், இம்முறையும் போராடி தகுதியிழப்பில் இருந்து தப்பித்தது நிம்மதி அளித்தாலும் கடந்த இரண்டு பருவங்களிலும் தனது செயல்பாடு எவர்ட்டனுக்கு மகிழ்ச்சி அளித்திருக்காது.
வென்றும் பயனில்லை
இதனிடையே, வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியபோதும் பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறுவதை லெஸ்டர் சிட்டி குழுவால் தவிர்க்க முடியவில்லை.
இந்தப் பருவத்தில் கடைசி எட்டு ஆட்டங்கள் இருந்தபோதுதான் லெஸ்டர் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் டீன் ஸ்மித். ஆனாலும், அக்குழுவை அவரால் கரைசேர்க்க இயலவில்லை.
இம்முறை 18ஆம் இடத்தில் முடித்த லெஸ்டர் குழுவின் செயல்பாடு மறுஆய்விற்கு உட்படுத்தப்படலாம் என்றும் பல மாற்றங்கள் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மித் பதவியில் நீடிப்பாரா என்பதும் உறுதியில்லை.
"இப்போதைக்கு அதனைப் பற்றி கேள்வியில்லை. நானும் சிந்திக்க வேண்டியுள்ளது," என்றார் ஸ்மித்.
இதற்கிடையே, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது லீட்ஸ் யுனைடெட் குழு. இதன்மூலம் பட்டியலின் கடைசி இரண்டாமிடத்தைப் பிடித்த அக்குழுவும் அடுத்த பருவ லீக்கில் விளையாடும் தகுதியை இழந்தது.
சௌத்ஹேம்டன் குழு ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், அடுத்த பருவத்தில் பர்ன்லி, லூட்டன் டவுன், ஷெஃபீல்டு யுனைடெட் ஆகிய மூன்று குழுக்களும் பிரிமியர் லீக்கில் விளையாடத் தகுதிபெற்றுள்ளன.

