லண்டன்: தனது 121 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியக் காற்பந்தில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது பிரைட்டன் அண்ட் ஹோவ் அல்பியான் காற்பந்துக் குழு.
இம்மாதம் 21ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் சௌத்ஹேம்டனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியபோதே பட்டியலின் முதல் ஏழு இடங்களுக்குள் வருவதை பிரைட்டன் குழு உறுதிப்படுத்திக்கொண்டது.
பருவத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் ஆஸ்டன் வில்லா குழுவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் தோற்றுப்போனது. ஆயினும், 62 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாமிடத்தைப் பிடித்த அக்குழு அடுத்த பருவத்திற்கான யூயேஃபா கிண்ணத்தில் விளையாடும்.
அதேபோல, ஆஸ்டன் வில்லா குழு 2022/23 பருவத்திற்கான ஐரோப்பிய கான்ஃபரன்ஸ் லீக்கில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல், மான்செஸ்டர் யுனைடெட், நியூகாசல் யுனைடெட் ஆகிய குழுக்கள் அடுத்த பருவத்திற்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கிற்கு முன்னேறியுள்ளன. நியூகாசல் குழு சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெற்று இருப்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, ஆர்சனல் குழுவும் ஐந்து பருவங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கிற்கு முன்னேறியுள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் அக்குழு 5-0 என்ற கோல் கணக்கில் உல்வ்ஸ் குழுவை வென்றது. மாறாக, லீக் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட சிட்டி 0-1 என்ற கோல் கணக்கில் பிரென்ட்ஃபர்ட் குழுவிடம் தோற்றுப்போனது.

