அண்மை வாரங்களாக வெப்பமான வானிலை நிலவிவரும் வேளையில், உங்களுக்கு தலைவலி அல்லது மலச்சிக்கலைச் சமாளிக்க வேண்டியுள்ளதா? அப்படியென்றால், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருக்கக்கூடும். உடலில் நீர்ச்சத்து குறைந்து இருப்பதற்கான அறிகுறிகள் இவை.
நாள் ஒன்றுக்கு ஒருவர் எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைப் பலரும் அறிந்து இருப்பர். எனினும், இந்த அளவு ஒருவரின் அன்றாடத் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்யாமல் போகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், தாகமாக இருப்பதன் அடிப்படையில் மட்டும் தண்ணீரைப் பருகுவது போதாது.
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இரைப்பைக் குடல் இயல் மருத்துவரான டாக்டர் லிம் லீ குவான், "உடலில் நீர்ச்சத்து அளவைக் குறிப்பிடுவதற்கு தாகம் நம்பகமான அளவுகோலாக இல்லாமல் போகலாம். பலரும், குறிப்பாக முதியோருக்கு நீர்ச்சத்து குறையும்வரை அவர்களுக்கு தாகம் ஏற்படாமல் இருக்கலாம்," என்றார்.
ஆரோக்கியத்துக்கு தண்ணீர் மிகவும் முக்கியம்
உடலின் செயல்பாடுகளுக்கு தண்ணீர் முக்கியம். மனித உடல் 60 விழுக்காடுவரை தண்ணீரால் ஆனது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவு செரிமானமாவதற்கு, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு, உயிரணுக்கள் சத்துகளையும் உயிர்வாயுவையும் பெறுவதை உறுதிசெய்வதற்கு தண்ணீர் தேவை.
மூச்சுவிடுதல், வியர்த்துவிடுதல், சிறுநீர் கழித்தல் போன்றவற்றின் மூலம் ஒருவருக்கு நீர்ச்சத்து குறைவதாக ராஃபிள்ஸ் மெடிக்கல் மருத்துவர் டாக்டர் அனிதா இளங்கோவன் சொல்கிறார்.
"ஒருவரின் வயது, உடல் அளவு, உடல்நிலை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வானிலையைப் பொறுத்து அவருக்குத் தேவையான தண்ணீர் அளவு அமைகிறது.
"வெப்பமான வானிலையின்போது, வியர்வை மூலம் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதை ஈடுசெய்ய, பரிந்துரைக்கப்படும் எட்டு குவளைக்கும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்," என்கிறார் அவர்.
பேன்ஏஷியா சர்ஜரி குழுமத்தில் சிறுநீரக மருத்துவரான டாக்டர் ஜே லிம், நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாக சிறுநீரகக் கற்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்று உடைய நோயாளிகள் பலரைப் பார்க்கிறார்.
"பெரும்பாலான வேளைகளில், பரபரப்பான வேலை சூழல் காரணமாக அப்போதைக்கு அப்போது தண்ணீர் பருகுவதை மக்கள் மறந்துவிடுகின்றனர்," என்கிறார் அவர்.
நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் குடிப்பதையே டாக்டர் லிம்மும் மற்ற மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். காப்பி, தேநீர் பானங்களிலுள்ள மரவுப்புச் சத்தும் மதுவும் அடங்கிய பானங்களைத் தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், அவற்றைக் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதோடு நீர்ச்சத்தும் குறைகிறது.
எவ்வளவு தண்ணீர் குடிப்பது?
பார்க்வே ஷெண்டன் மருத்துவ இயக்குநரான எட்வின் சங், ஆண்கள் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டரும் பெண்கள் இரண்டு முதல் மூன்று லிட்டரும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
ஒரு லிட்டர் என்பது நான்கு குவளை தண்ணீருக்கு சமம்.
வியர்த்து விடுவதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 10 லிட்டர் வரை தண்ணீர் அளவு குறையக்கூடும்.
அறுபது கிலோ எடையுள்ள ஒருவருக்கு தினமும் குறைந்தது 1.8 முதல் 2.4 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுகிறது.
இதற்கிடையே, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு போன்ற மருத்துவப் பிரச்சினை உடையோர், எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.
ஏனெனில், உடலில் மிதமிஞ்சிய தண்ணீர் சேரும் நிலை ஏற்படக்கூடும்.

