இன்று உலக மிதிவண்டி தினம்
உலக அளவில் அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் என்றெல்லாம் கொண்டாடப்படுவதுபோல ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி ‘உலக சைக்கிள் தினம்’ கொண்டாடப்
படுகிறது.
சைக்கிளைத் தமிழில் மிதிவண்டி அல்லது ஈருருளி என்று அழைக்கின்றனர். வறியவர்களைத் தவிர அனைவராலும் வாங்கக்கூடிய, எரிபொருள் தேவைப்படாத வாகனம் சைக்கிள்.
சைக்கிளை யார் கண்டுபிடித்தார்கள், எந்த நாடு முதலில் என்பதெல்லாம் இன்றும் கூட சர்ச்சைக்குரிய வாதங்களாகவே இருக்கின்றன. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதுதான் தொழில் புரட்சிக்கே முன்னோடி என்பார்கள். சைக்கிள் என்பது அந்த சக்கரத்தையே மையமாகக் கொண்டு உருவானது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் சைக்கிள். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
சைக்கிள் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயதானவர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள். எரிபொருள் நிரப்பக்
கூடிய வாகனங்களின் வருகையால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது.
உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக உடல், நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது.
சைக்கிளைப் பயன்படுத்துவது, ‘சுற்றுச்சூழலைக் காக்கும் என்பது ஒருபுறம் இருக்க,
அதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் பத்து நன்மைகளை வரிசைப்படுத்துகிறார் பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத்.
சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.
சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.
ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் வராது.
உடல் எடையைக் குறைக்க உதவும்.
சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரித்து மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள ‘க்ளாஸ்கௌவ்’ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு 45 விழுக்காடு புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. சைக்கிள் ஓட்டத் தொடங்கியவுடன் ‘அக்கம் பக்கம் பார்க்காதே, ஆளைக் கண்டு மிரளாதே, பைய பைய ஒதுங்காதே, பள்ளம் பார்த்து போகாதே,’ என்ற பாடலை பாடியபடி செல்லலாமே ஊர்வலம்.
குறிப்பு :
* சைக்கிள் ஓட்டுபவர்கள் எடுத்தவுடன் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம்.
* தாங்கமுடியாத மூட்டு வலி, அதிக உடல் எடை, இதயக்கோளாறு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று சைக்கிள் ஓட்டவும்.
* வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்தே, சைக்கிள் ஓட்டும் நேரமும் வேகமும் அமைய வேண்டும்.