சோர்வும் வலிகளும் இன்று அதிகமானோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.
உடலில் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் வலி அன்றாடம் ஏற்படும் ஒரு தொந்தரவாகப் பலருக்கும் உள்ளது.
கை வலி, கால் வலி, கழுத்து வலி, தலை வலி, இடுப்பு வலி, தசை வலி, நரம்பு வலி, வயிற்று வலி, முழங்கால் வலி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
உடலின் சமநிலை
உடல் என்பது பஞ்ச பூதங்களின் இயக்கம் என்பார்கள். இந்தப் பஞ்ச பூதங்களின் சமன்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் தேக்கம் அடையத் தொடங்கும்.
அன்றாட வாழ்வில் உணவு, உழைப்பு, தூக்கம், சுவாசம், தண்ணீர் ஆகியவை தொடர்ந்து அதிகரிப்பதோ அல்லது குறைவதோ பஞ்சபூத சமன்பாடு இல்லாத நிலையாகும். இந்தச் சமன்பாடு சீர்கேட்டினால் உணவு செரிமானமின்மை முதல் தூக்கமின்மை, சோர்வு வரை பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
வலி என்பது
அன்றாடம் ஏற்படக்கூடிய உடல் வலியை போக்க, உடலைச் சமநிலைப்படுத்தும் விதமாக உடல் தேவைக்கேற்ப காய்ச்சலாக வெளிப்படுத்தி போதிய ஓய்வு, எளிய உணவு முறை மூலம் தன்னைத்தானே சரி செய்துகொள்கிறது. இந்த ஓய்வையும் எளிய உணவையும் கொடுக்காதபோது உடலின் செயல்பாடு அதிகரிக்க ஏதாவது ஓர் உறுப்போ அல்லது உடலில் ஒரு பகுதியோ பலவீனமாகத் தொடங்குகிறது.
இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட, அது உடலின் பலவீனமான பகுதியில் வலியாக வெளிப்படும். இந்தப் பாதிப்பே உடல் வலியாகும். அந்த வலியை முறையாக கவனிக்காதபோது அது நாள்பட்ட நோயாக, நிரந்தர வலியாக மாறுகிறது.
மூட்டு வலிக்கு காரணம், மூட்டுகளைச் சுற்றி உள்ள தசைநார்கள் வலு இழப்பதும், மூட்டுகளுக்கு இடையில் உள்ள சவ்வு பகுதியில் நீர்த்தன்மை குறைவதால் அவை சுருங்கி விரியும் தன்மையை இழந்து இரு எலும்புகளும் உறைவதும் ஆகும். இதனால் வலி ஏற்படுகிறது.
எதிர்கால நோயை ஆரம்பத்திலேயே அறிவிக்கும் முன்னறிவிப்பே தொடரும் உடல் வலி.
உடலின் இந்த எச்சரிக்கையைப் புரிந்துகொள்ளாமல் பலர் உடலில் ஏதோ ஓர் இடத்தில் வலி ஏற்பட்டவுடன் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறோம்.
வலி மருந்துகளின் செயல்பாடு
தலையில் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில் ஹைப்போதாலமஸ் என்ற ஒரு பகுதி உள்ளது. இது உடலில் ஏற்படும் உணர்வுகளில் ஒன்றான வலியை மூளைக்குத் தெரிவிக்கிறது.
வலி மருந்து இந்த ஹைப்போதாலமசின் செயல்பாட்டை நிறுத்தி, வலி மூளைக்கு எட்டுவதை நிறுத்துகிறது. ஆக வலி உடலில் இருக்கும். வலிக்கான காரணிகளும் உடலிலேயே இருக்கும். ஆனால் வலியை மட்டும் உணரமாட்டோம்.
தொடர்ச்சியாக மாத்திரை உண்ணும்போது அதிக கோபம், பயம், கண் எரிச்சல், தெளிவற்ற சிந்தனை, தூக்கமின்மை, பசியின்மை, இடுப்புவலி, புதிய இடங்களில் வலி என்று பல புதிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதற்குக் காரணம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறையத் தொடங்குவதே ஆகும்.
நிரந்தர வலிகளைக்
குணப்படுத்த சில வழிமுறைகள்
பசி, தூக்கம், தாகம், உழைப்பு, நல்ல காற்று ஆகியவற்றை சீராக தேவைக்கேற்ப விழிப்போடு கொடுப்பதே முதல்நிலை, நீண்ட நாள் வலியிலிருந்து விடுதலை பெற உதவும்.
எளிதில் செரிமானமாகும் சத்துமிக்க தானியங்கள், பழங்கள், கீரைகள் உட்கொள்ள வேண்டும்.
அளவான உடற்பயிற்சி. யோகா மூச்சுப் பயிற்சி தவறாமல் காலையில் பழக்கப்படுத்தவும்.
நீண்டநேரம் நாற்காலியில் உட்காரும்போது முதுகை நேராக வைத்து உட்கார வேண்டும்.
இறைச்சி, பால் பொருள்களை குறைத்துக்கொள்வது நல்லது. பூண்டு, இஞ்சி, மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும்.
நீர்ச் சத்துள்ள (தாது உப்புகள்) காய்கறிகளான பூசணி, சுரைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நாள்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
மிகுந்த சோர்வு
உடலில் சமநிலை குறையும்போதே சோர்வும் ஏற்படுகிறது.
உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வு ஏற்படும். அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.
தூக்கமின்மை காரணமாகவும் சோர்வு ஏற்படும், உடல் நலமும் பாதிக்கப்படும். அன்றாடம் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் முக்கியம். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும். உடல் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.
உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தாலும் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். உடல் எடையைக் குறைக்க, சரியான உணவு, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
உடல் சோர்வு நீங்க கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடலாம். மசிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிடும்போது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
பொதுவாக சோர்வு, முறையான உணவு, தூக்கம், உடற்பயிற்சி மூலம் சரியாகிவிடும். ஆனால், மிகுந்த சோர்வு விரைவில் சரியாகாது. இதற்குச் சரியான காரணம் கண்டறியப்படவில்லை.
மன அழுத்தம், குடும்பச் சூழ்நிலை, செய்யும் வேலை அல்லது படிப்பில் விருப்பமின்மை போன்ற காரணங்களாலும் இந்த வகையான சோர்வு ஏற்படலாம். இது ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்திருக்கலாம்.
உடற்பயிற்சி செய்தாலும் சோர்வு வரும். காலை எழுந்தவுடன் அசதியாக இருக்கும். மறதி ஏற்படும். மனதின் ஒருமுகத்தன்மை குறையும். குழப்பம் வரும், மூட்டு வலி வரும் ஆனால் வீங்காது, சிவக்காது. சிலருக்கு தொண்டை வலி, தலைவலி, வேறு சிலருக்கு வேறு வலிகள் ஏற்படும்.
இத்தகைய சோர்வுக்கு தனியான பரிசோதனைகள் இல்லை. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, தைராய்டு, கொழுப்பு, ரத்த சோகை, கிருமித்தொற்று, இதயம், சிறுநீரகம், மனச் சோக நோய், கட்டிகள், வெள்ளை அணுக்களின் அளவு போன்றவற்றுக்கான பரிசோதனைகளே செய்யப்படுகின்றன. மூளை சோதனைகளும் செய்வதுண்டு.
மிகை அசதியால் சோர்வாக இருப்பவர்கள் மெதுவாக வேலை செய்ய வேண்டும். வேலையையும் ஓய்வையும் தூக்கத்தையும் முறைப்படுத்தவேண்டும். பெரிய வேலையை சிறிது சிறிதாகப் பிரித்துச் செய்வதற்குப் பழக வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடுவது மிகவும் நல்லது.
உலர்ந்த திர்ட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம், முதலியவற்றை அன்றாட சாப்பிடலாம்.
பேரிச்சம் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து ஊறிய பழத்தை தண்ணீருடன் சேர்த்து உண்ணலாம்.
ஒரு குவளை அன்னாசிப் பழச் சாற்றுடன் மிளகுத் தூள் சேர்த்து குடிக்கலாம்.
முருங்கைகீரையை காம்புடன் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்க அசதி நீங்கும்.
மிளகை நெய்யில் வறுத்துத் தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு அன்றாடம் சாப்பிட சோர்வு குறையும்.
வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிடலாம்.
கேரட் சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிடலாம்.
அகத்திக்கீரையை வாரம் இருமுறை உண்ணலாம்.
செங்கரும்புச் சாறு 100 மி.லிட்டர், எலுமிச்சைச் சாறு 30 மி.லிட்டர், சீரகப் பொடி ஆகியவற்றை கலந்து காலையில் குடிக்கலாம்.
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்தால் கை, கால் வலி வராமலிருக்கும்.
நல்ல எண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய் கலந்து வலி இருக்கும் இடத்தில் தேய்த்து வர நாள்பட்ட முட்டு வலிகளும் தசை வலிகளும் குணமாகும்.