காலை உணவாக உண்ணப்படும் ‘சிரல்ஸ்’, சிற்றுண்டி ‘பார்’, உறைய வைக்கப்பட்ட உணவுகள், பொட்டலம் செய்யப்பட்ட அனைத்து இனிப்புகள் உள்ளிட்ட பல பொருள்கள் நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் போன்ற விரும்பத்தகாத உடல்நலக் கேடுகளுடன் தொடர்புடையவை என்பது அனைவரும் அறிந்ததே.
ருசியான, எப்போதும் வசதியான இந்த உணவுகள் மன நலத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரை தெரிவிக்கிறது.
ஒருவர் எவ்வளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் மனச்சோர்வுடனும் கவலையுடனும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை கடந்த 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.
சில ஆய்வுகள் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் சாப்பிடுவதற்கும் நினைவாற்றல், புரிந்துகொள்ளுதல் போன்ற திறன்கள் குறையும் அபாயத்திற்கும் இடையே தொடர்புள்ளதாகக் குறிப்பிடுகின்றன.
பிரேசிலிய ஆய்வாளர்கள் 2009ல் பதப்படுத்தப்படாத உணவு, குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட (பழம், காய்கறிகள், அரிசி, மாவு போன்றவை) உணவுகள், பதப்படுத்தப்பட்ட (எண்ணெய், பட்டர், சர்க்கரை, பால் பொருள்கள், டின்களில் அடைக்கப்பட்ட சில உணவுகள்), அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என நான்கு வகையான உணவுகளை ஆய்வுசெய்தனர்.
அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ரசாயன சேர்க்கைகள், வண்ணங்கள், செயற்கை சுவைகள், இனிப்புகள் போன்ற வீட்டில் செய்யப்படும் உணவுகளில் அரிதாகவே பயன்படுத்தப்படும் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன என்று பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக்கழகத்தில் உணவு பதப்படுத்துதல் துறையின் ஆய்வாளர் யூரிடைஸ் மார்டினெஸ் ஸ்டீல் கூறினார்.
இந்த வகைப்பாடு முறை இப்போது ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடைகளில் விற்கப்படும் பொட்டலமிடப்பட்ட உறைந்த உணவுகளும் துரித உணவகங்களில் விற்கப்படும் பெரும்பாலான உணவுகளும் அதிகளவு பதப்படுத்தப்பட்டவை.
குடல் நலக்கேடு மூளையை எவ்வாறு பாதிக்கலாம் என்பதில் பெரும்பாலான ஆய்வுகள் கவனம் செலுத்தியுள்ளன. அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக நார்ச்சத்து குறைவாக இருக்கும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளில் நார்ச்சத்து நிறைய இருக்கும்.
நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. மூளையின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கும் நார்ச்சத்து அவசியம் என்று ஊட்டச்சத்து மனநல ஆய்வுக்கான அனைத்துலக சங்கத்தின் தலைவரும் டீக்கின் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளருமான டாக்டர் வொல்ப்காங் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகள், மனிதர்களிடம் செய்யபட்ட சில ஆய்வுகளின்படி, செயற்கை இனிப்புகள் போன்றவை குடல் நுண்ணுயிரை எதிர்மறையாக பாதிக்கலாம் என்று கூறுகின்றன என்று டாக்டர் மார்க்ஸ் குறிப்பிட்டார்.
ஆரோக்கியமற்ற குடல், சர்க்கரை அதிகம் உள்ள உணவு கடுமையான அழற்சிக்கு பங்களிக்கக்கூடும். இது பல மன, உடல் பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லும் என்று டாக்டர் லேன் கூறினார். “வீக்கத்திற்கும் மூளைக்கும் இடையிலான தொடர்புகள் மனச்சோர்வின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது,” என்று அவர் கூறினார்.