நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் அருந்தவேண்டிய பானங்களையும் அவர்கள் மறந்தும் பருகக்கூடாத பானங்கள் குறித்தும் ஊடகங்கள் தகவல்களைப் பகிர்ந்துள்ளன.
நீரிழிவு நோயாளிகள் தயக்கமின்றி அருந்தக்கூடிய பானம் என்றால் தண்ணீர்தான். இதை நாள் முழுவதும்கூட அருந்தலாம். இதனால் அவர்களது சர்க்கரை அளவு உயரவோ அல்லது குறையவோ செய்யாது.
நாள் முழுவதும் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
உங்களுடைய உடல் போதுமான நீர்ச்சத்துடன் உள்ளதா என்பதை சிறுநீரின் நிறத்தின் வழி தெரிந்துகொள்ளலாம். வெளிர்மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடல் நீரேற்றமாக இருப்பதாக அர்த்தம்.
'த டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகத் தகவல், "இனிப்பில்லாத இளநீரிலும் சர்க்கரை உள்ளது என்றாலும் சர்க்கரை பானங்களைவிட இளநீர் சிறந்தது. இது ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும். எனினும் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு குவளை (240-480 மில்லி) வரை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
"அதேபோல், பார்லி கரையாத நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வு என்று சொல்லலாம். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பராமரிப்பதற்கு உதவும். அத்துடன், கொழுப்பு, ரத்தச் சர்க்கரையையும் குறைக்கிறது," எனக் குறிப்பிட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் பசும்பால் அருந்தலாம். இதில் புரதச்சத்தும் கேல்சியமும் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், ஒருசில மருத்துவர்களின் பரிந்துரையின்படி, நீரிழிவு நோயாளிகள் பாலை நேரடியாக அருந்தாமல் சிறிதளவு தேயிலை அல்லது காபித்தூள் கலந்து சர்க்கரை இல்லாமல் அருந்துவது நல்லது.
'கிரீன் டீ' யும் 'டைப் 2' நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
நீரிழிவு நோயாளிகள் சோடா உள்ளிட்ட மென்பானங்களை அடிக்கடி குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் செயற்கை பானங்களைக் குடிக்காமல் தவிர்ப்பதே நல்லது.
பழச்சாறுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. அவற்றுக்குப் பதிலாக தக்காளிச் சாறு அருந்தலாம்.
அடிக்கடி தண்ணீர் குடிப்பதற்கு சலிப்பாக இருந்தால், தக்காளிச் சாறு நீரேற்றத்திற்கு உதவும். இதில் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கவேண்டும். ஒரு நாளில் ஒன்றரை குவளை தக்காளிச் சாறு அருந்துவதால் பல்வேறு சத்துகள் கிடைக்கின்றன.
பழங்களைச் சாறாக அருந்து வதைவிட நேரடியாக உண்பது நல்லது. அவற்றையும் அளவோடு உண்பது சிறந்தது.
இதுகுறித்து மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.