ரச்சனா வேலாயுதம்
'சிங்கப்பூர், தலைசிறந்த துறைமுக நகரம்' என்ற தலைப்பில் சிங்கப்பூர் இரவு விழா ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளது. சிறிய துறைமுக நகரத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த சிங்கப்பூர் நவீன நகரமாக மாறியுள்ளதை முன்னிட்டு பிராஸ் பாசா, புகிஸ் இடங்களில் இந்த கொண்டாட்டம் நடைபெறும். இவ்விழா ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை நடக்கும்.
ஒரு முக்கிய துறைமுகமாக செயல்பட்ட சிங்கப்பூரின் 700 ஆண்டு வரலாற்றில் பிராஸ் பாசா, புகிஸ் இடங்கள் வர்த்தகத்தை ஊக்குவித்து, அதிக அதிகாரம் கொண்ட இடங்களாக கருதப்பட்டன. வரலாற்றில் இவ்விடங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் உள்ள அரும் பொருளகம், மரபுடைமை கட்டடங்கள் போன்றவற்றை மக்கள் கண்டு ரசிக்கலாம். உள்ளூர் கலைஞர்களின் பல படைப்புகளும் இந்நிகழ்ச்சியில் காட்சியளிக்கப்படும். கண்களைக் கவரும் வண்ணம் திரைக்காட்சிகளையும் இரவு ஒளி கண்காட்சிகளையும் ரசிப்பதோடு புதிய உணவு வகைகளை ருசித்து அங்குள்ள கடைகளில் பொருள்களை மக்கள் வாங்கலாம்.

