"பைக்கர் (மோட்டார்சைக்கிளோட்டப் பிரியர்கள்) வாழ்க்கைமுறை நமக்கு பொழுதுபோக்காக மட்டுமின்றி மற்றவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது" என்று சிங்கப்பூரில் பைக்கர் வாழ்க்கைமுறையையும் சமூக அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சிகளையும் இணைத்துச் செயல்படும் 'ஸ்கல்ஸ் ஆஃப் நொக்ஸ்' குழுவை ஆரம்பித்த அல்ட்ரிச் ஜெய் கிஷன், 29, கூறினார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பைக்கர் வாழ்க்கைமுறையை சிங்கப்பூருக்கு ஏற்ப மாற்றி சக ஆர்வலர்களுடன் 2019ஆம் ஆண்டில் இக்குழுவை ஆரம்பித்தார் ஜெய். ஒவ்வொரு வாரமும் குழுவினர் மோட்டார்சைக்கிளில் சிங்கப்பூர், மலேசியாவை சுற்றி வருவார்கள்.
மோட்டார்சைக்கிள்களை பழுதுபார்ப்பது, 'லெதர்' ஜாக்கெட் அணிந்து பலவகையான மோட்டார்சைக்கிள்களை ஒட்டி, ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிப்பது போன்ற காரணங்களுக்காக இக்குழு ஆரம்பிக்கப்பட்டது என்றார் ஜெய். பொழுதுபோக்காக தொடங்கப்பட்ட இக்குழுவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்புகளும் கிடைத்தன.
குழந்தைகள் தொடர்பான சமூக அமைப்பில் ஆலோசகராக பணிபுரியும் ஜெய் தன்னால் முடியும் வரை சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்தக் குழு உதவ முடியும் என்று கண்டறிந்தார்.
"குழுவில் இருக்கும் நாங்கள் வாழ்க்கையில் பல சவால்களையும் பிரச்சினைகளையும் தாண்டி வந்துள்ளோம். நமக்கு கிடைக்காத உதவியை இப்போது மற்றவர்களுக்கு அளிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது," என்றார் ஜெய். சென்ற மாதம் பார்கின்சன்ஸ் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட பார்கின்சன்ஸ் அமைப்புடன் ஒன்றுசேர்ந்து இன்ஸ்டாகிராமில் ராஃபிள் போட்டியை (ஒரு வகை அதிர்ஷ்டக் குலுக்கு) ஒன்றை நடத்தினர்.
தெரிந்தவர் இந்நோயால் பாதிக்கப்பட்டதைக் குழு உறுப்பினர் ஒருவர் அறிந்திருக்கிறார். அவர் மனம் உடைந்துபோன நிலையில் இருந்தபோது தங்களுக்கு நிதி திரட்ட எண்ணம் தோன்றியதாகக் கூறினார் குழுவின் மற்றொரு நிறுவனரான சவின் நாயர்.
"குழுவில் உள்ளவர்களை நமது குடும்பத்தைப்போல் பார்த்துக்கொள்வோம். இவர்களில் ஒருவருக்கு உதவ நாம் எல்லாரும் தயங்காமல் முன்வந்தோம். 'ராஃபிள்' போட்டியில் நன்கொடை அளித்தவர்களில் ஒருவருக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மோட்டார்சைக்கிளின் பாகத்தைப் பரிசாக அளித்தோம்," என்று முழுநேர பச்சை குத்தும் கலைஞரான சவின் கூறினார்.
தற்போது இக்குழுவில் இருக்கும் நால்வர் முழுநேர வேலையையும் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதோடு குழந்தைகள், முதியவர்கள் போன்றோருக்கும் வெவ்வேறு வழிகளில் உதவி வருகின்றனர். 2020ஆம் ஆண்டில் சிறுவர் தினத்தன்று வசதி குறைந்த பாலர்பள்ளி மாணவர்களுக்கு பீட்ஸா உணவைத் மோட்டார்சைக்கள்களில் சென்று கொடுத்து அவர்களை மகிழ்வித்தனர்.
மார்பகப் புற்றுநோய் அமைப்புக்கான நிதி திரட்டும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார் ஜெய்.
"ஒரு குழுவாக நமது பைக்கர் வாழ்க்கைமுறையை நாம் மறக்கவில்லை. குழுவுடன் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவதோடு நிதியுதவி அளிப்பதிலும் ஈடுபடுவது நமக்கு வழக்கமாகிவிட்டது," என்றார் ஜெய்.
ரச்சனா வேலாயுதம்

