கி.ஜனார்த்தனன்
பல வேளைகளில் சொந்தக் காலில் நிற்க வேண்டிய நிலை, பிறர் நம்மை எளிதில் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இவ்விரண்டும் மிகச் சிறுபான்மையினராக இருப்போரது வழக்கமான அனுபவமாகும். இவ்வாறு சிங்கப்பூரில் பாரசீகர்கள், யூதர்கள், சீக்கியர்கள் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த சாதாரண மாதரின் கதைகளைச் சொல்கிறது 'சிக்பீஸ் டு குக் அன்ட் அதர் ஸ்டோரிஸ்' (Chickpeas to Cook & Other Stories).
இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றிய பகிர்வு அமர்வுக்குக் கடந்த 10ஆம் தேதியன்று 'தி இந்து செண்டர்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் புத்தகத்தின் எழுத்தாளரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளருமான நீலஞ்சனா சென்குப்தா தமது படைப்பு குறித்து பேசியதுடன் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். தேசிய பல்கலைக்கழகத்தின் ஆங்கில, மொழியியல் மற்றும் நாடகத் துறை பேராசிரியர் சித்ரா சங்கரன் இந்நிகழ்ச்சியின் நெறியாளராக இருந்தார்.
பக்குவம் தரும் உயர்வு
புத்தகத்தின் பெயர்க்காரணம் குறித்து தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருவாட்டி சென்குப்தா, சீக்கிய மாது ஒருவர், தொலைந்துபோன தம் சகோதரனை நினைத்து கொண்டைக்கடலை சமைப்பதை அப்பெயர் குறிப்பிடுவதாகச் சொன்னார்.
ஆனால் அந்தத் தலைப்புக்கு மற்றோர் ஆழமான பொருளும் உண்டு என்றார் திருவாட்டி சென்குப்தா.
"கொதிக்கவிடப்படும் கொண்டைக்கடலை மேலே மிதந்து வருவதை, வாழ்க்கையால் பக்குவப்பட்ட மனிதனின் உயர்வுக்கு ஓர் ஆன்மீக உவமையாகப் பழங்கால பாரசீகப் புலவர் ரூமி பயன்படுத்தினார்," என்றார் திருவாட்டி சென்குப்தா.
"சமூகம், சமயம், கலாசாரம், பாலினம் எனப் பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து இந்த நூல் ஆராயப்படலாம். வெவ்வேறு சிறுகதைகளிலிருந்து வெவ்வேறு கருப்பொருள்களை வாசகர்கள் காணலாம்," என்றார் அவர்.
'சகோதரித்துவம்' (sisterhood) ஒவ்வொரு கதையிலும் தென்படுவதாகவும் திருவாட்டி சென்குப்தா தெரிவித்தார்.
புதினங்களிலும் உண்மை தேவை
புதினம் என்பது கற்பனையில் எழுதப்பட்டாலும் அதற்கான ஆய்வுகள் நேர்மையாக இருக்கவேண்டும். பிறர் படும் வேதனைகளைக் கேட்டு உண்மையிலேயே அனுதாபப்படவேண்டும் என்று திருவாட்டி சென்குப்தா தெரிவித்தார்.
கோல்கத்தாவில் பிறந்த திருவாட்டி நீலஞ்சனா, கடந்த 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இளம் வயது முதல் எழுதுவதில் ஆர்வம் காட்டிய திருவாட்டி சென்குப்தா, தாம் எழுதும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஆய்வு செய்யும் வழக்கத்தைக் கொண்டவர்.
நன்கு ஆய்வு செய்வதன் மூலம் தலைப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்று கூறிய அவர், எழுத்தாளர்கள் தங்களது சொந்த எண்ணப்போக்குகளைக் கதாபாத்திரங்களுக்குள் திணிக்கக்கூடாது என்றார். ஆய்வு செய்து அதன் தொடர்பாக பேட்டியளிப்பவர் என்ன சொல்கிறார் என்பதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு அதை அப்படியே பிரதிபலிக்கவேண்டும் என்றார் அவர்.
தவறாக எதுவும் எழுதக்கூடாது என்பதற்காக மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து எழுதியதாகத் தெரிவித்தார்.
"நான் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள், அவற்றின் உறுப்பினர்கள், சமய நல்லிணக்க வட்டாரங்களில் இருப்பவர்கள் போன்றோருடன் பலமுறை நடத்தப்பட்ட பேட்டிகளின் அடிப்படையில் இந்தக் கதைகளை உருவாக்கினேன்," என்று அவர் கூறினார்.
பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்துகொள்வதற்கு திருவாட்டி சென்குப்தா அவர்களின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டி இருந்தது.
"உங்களிடம் மக்கள் தங்களைப் பற்றி பேச வைப்பது ஒரு திறனாகும். இந்தத் திறனைக் காலப்போக்கில் நான் வளர்த்துக்கொண்டேன். நுட்பமாக உள்ள மனதைப் புரிந்து அதனைக் கையாள்வதற்கு உள்ளுணர்வும் தேவைப்படுகிறது," என்று கூறினார்.
மாதருக்குரிய தனித்தன்மையான அனுபவங்கள்
குடும்பம், வேலையிடம், பிள்ளைகள், வழிபாட்டு இடங்கள், பெற்றோர், சமூகம், சமுதாயம் ஆகிய ஒவ்வொன்றிலும் வெவ்வேறு அடையாளங்களைப் பெண்கள் எவ்வாறு கையாண்டு சமாளிக்கிறார்கள் என்பதை கதைகளின் எல்லாப் பெண் கதாபாத்திரங்களும் சித்திரிக்கின்றன என்றார் திருவாட்டி சென்குப்தா.
"மிகச் சிறுபான்மையினராக உள்ள பெண்களில் பலர் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்கிறார்கள். அப்போது புதிய அடையாள அம்சங்கள் அவர்களுடன் இணைகின்றன. இதுவும் அவர்களுக்குச் சவாலான ஒன்று," என்று அவர் கூறினார்.
பெண்களின் தியாகமும் பொறுமையும் அன்பின் வெளிப்பாட்டுக்கு அவசியம் என்பதைத் தம் புத்தகத்தின் பெண் கதாபாரத்திரங்கள் நினைப்பதாகத் திருவாட்டி சென்குப்தா தெரிவித்தார்.
"தங்கள் அன்புக்குரியவர்கள் மகிழ்ச்சியாக இருக்க எண்ணற்ற தியாகங்களைச் செய்தாக வேண்டும் எனப் பெண்கள் நம்ப வைக்கப்படுகின்றனர்," என்று அவர் கூறினார்.
அறிவூட்டும் பன்முக கலாசாரம்
வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த கதை மாந்தர்களைப் பற்றிய இத்தொகுப்பை உருவாக்க அக்கலாசாரங்கள் மீதான ஆர்வம் திருவாட்டி சென்குப்தாவுக்குக் கைகொடுத்தது.
எந்த சமயமாக இருந்தாலும் முடிவு ஒன்றே எனக் கருதி ராமகிருஷ்ண பரமஹம்சரின் கொள்கையைப் பின்பற்றிய குடும்பச்சூழலுடன் வளர்ந்த அவர், சிங்கப்பூரில் நிலவும் பகுத்தறிவுடன் கூடிய பன்முக கலாசாரத் தன்மையின் தாக்கமும் தம் படைப்பில் இருப்பதாகக் கூறினார்.
கலாசாரப் பன்முகத்தன்மை கொண்ட பகுத்தறிவற்ற சமுதாயங்களில் சமய வெளிப்பாடுகள் தடை செய்யப்படும். பகுத்தறிவுள்ள சமுதாயங்களில் மக்கள் வெவ்வேறு கலாசாரச் சூழல்களில் பங்குபெற முடிவதால் அவர்கள் பொதுவாகவே அடிப்படைவாதிகளின் அழைப்புகளுக்குச் செவிசாய்ப்பதில்லை என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் கலாசாரப் பன்முகத்தன்மை மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக, ஆன்மீகமாக இருப்பதாகக் குறிப்பிட்டார் திருவாட்டி சென்குப்தா.
"மாதர் நாள்தோறும் தங்கள் அலுவல்களை முடித்துவிட்டு இறைவழிபாட்டில் மனமுருக ஈடுபடுகிறார்கள். அப்போது தங்களது வழக்கமான நிலையை அவர்கள் அறிந்திருந்தும் நிச்சயமற்ற, அறியப்படாத மாற்று நிலை ஒன்றை நாடுகிறார்கள். இதற்குத் தைரியம் தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் முக்கியப் படைப்பாக இந்தப் புத்தகம் விளங்குவதாகத் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பிரிவுக்கான தலைவர் இணைப் பேராசிரியர் ராஜேஷ் ராய் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"சிறுபான்மை கதாபாத்திரங்களின் பாலின அனுபவங்களை விளக்கமாக எழுதி அவற்றைக் கோர்த்து வழங்க இயல்வது இந்தப் புத்தகத்தின் பலம் என்பேன்," என்றார் டாக்டர் ராஜேஷ் ராய்.
சிங்கப்பூரின் பல கலாசாரச் சூழலைப் பிரதிபலிப்பதால் இந்தப் புத்தகத்தைத் தங்களது பகிர்வு அங்கத்திற்குத் தேர்ந்தெடுத்ததாக 'த இந்து செண்டர்' அமைப்பு கூறியது.
"தத்தம் சமயங்களில் இருந்துகொண்டே மாதர் சவால்மிக்க வாழ்க்கையில் தங்களுக்குரிய திசைகளைத் தேட முடிந்தது பற்றியவை இந்தக் கதைகள்," என்றது அமைப்பு.

