அஜ்மினா பானு
உலக மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்டு வரும் ஓர் அங்கில நாடகத் தொடர் 'நெவெர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever). நான்கு 'சீசன்'களைக் கொண்ட இந்த நாடகத் தொடர், கடந்த 8ஆம் தேதியன்று அதன் இறுதி சீசனை வெளியிட்டது.
கதைக்களம்...
இளமைப் பருவத்தில் தன் தந்தையை இழந்த தேவி என்ற கதாபாத்திரம், கல்வி, காதல், குடும்பம், நண்பர்கள், மனநலம் போன்ற பல அம்சங்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதே இந்த நாடகத்தின் மையம்.
ஆங்கிலத்தில் புதிய முயற்சி...
தமிழினக் கதாநாயகியையும் தமிழ்ப் பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாகக் கொண்ட நாடகங்களை ஆங்கில ஊடகங்களில் பார்ப்பது அரிது. அமெரிக்காவில் நடப்பதாக அமைந்த இந்நாடகம், உலகெங்கும் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தமிழ் கலாசார சித்திரிப்பு...
பிள்ளையார் வழிபாடு, நவராத்திரி, அஸ்தி கரைத்தல் எனப் பல இந்து சடங்குகள் இந்நாடகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இறுதிப் பாகத்தில் நடைபெற்ற திருமணக் காட்சி ஒன்றில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றன.
தமிழர் பண்பாடு ஓர் ஆங்கில நாடகத்தில் காட்டப்படுவதும் ஆங்கில நாடகங்களில் ஆங்கிலப் பாடல்களைப் பயன்படுத்தும் வழக்கத்திற்கு மாறாக அமைந்த திருமணக் காட்சியும் தமிழர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
வாழ்க்கையோடு தொடர்பு
படுத்திக்கொள்ளலாம்...
தினசரி வாழ்க்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் சமுதாய எதிர்பார்ப்புகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அனுபவங்களையும் இந்த நாடகம் சித்திரித்துள்ளது.
கமலா என்ற கதாபாத்திரத்திற்கு வயது கூடிக்கொண்டே போவதால் விரைவில் மணமுடித்தாக வேண்டும் என்று அவரின் பாட்டி நச்சரிக்கும் சூழல் நாம் அறிந்ததே. கலாசாரம் அறிந்த, ஓர் இந்திய மாப்பிள்ளையைக் குடும்பத்தார் பார்த்து மணமுடிக்க வேண்டுமே தவிர காதலிக்கும் ஒருவனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தப் பாட்டி கதாபாத்திரம் கூறுவதும் சிலரது இயல்பு வாழ்க்கையில் நடக்கக்கூடியது.
ஆனால் நாடகத்தில் இத்தகைய சூழல்கள் நகைச்சுவையாக எளிதில் தீர்க்கப்பட்ட விதம் பல தமிழர்களின் அனுபவத்தைச் சரியாக சித்திரிக்கவில்லை என்று சிலருக்குத் தோன்றி இருக்கலாம்.
இருப்பினும் கணவரின் இறப்புக்குப் பின் மறுமணம் புரிதல், புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் பன்முக அடையாளத்தோடு போராடுதல் போன்ற அம்சங்களை 'நெவெர் ஹேவ் ஐ எவர்' சிறப்பாகக் கையாண்டுள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.
பெண்ணியம்...
திரையில் ஆண்களை மையப்படுத்துவதற்கு மாறாக 'நெவெர் ஹேவ் ஐ எவர்' பெண்களை மையமாகக் கொண்டிருப்பது புத்துணர்ச்சி அளித்துள்ளது. கதாநாயகியோடு நின்றுவிடாமல் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பெண் துணைக் கதாபாத்திரங்களின் பண்புகள், வாழ்க்கைச் சூழல்கள் போன்றவையும் ஆழமாக ஆராயப்பட்டுள்ளன.
வேலை இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பாகுபாடு, ஒற்றைத் தாய்மார்கள் சந்திக்கும் சவால்கள் எனப் பெண்களுக்குரிய பிரச்சினைகளை இந்நாடகம் அலசி ஆராய்ந்துள்ளதும் புதுமை.
விமர்சனம் பலவிதம்...
இதற்கிடையே தேவி என்ற கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை ஒருவர் நடித்திருந்தாலும் மற்ற தமிழ் கதாபாத்திரங்களில் தமிழ் அல்லாத இந்தியர்கள் நடித்திருந்தது தமிழ் நடிகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாய்ப்பு என்று ஒருசிலரின் விமர்சனத்தைப் பெற்றது 'நெவெர் ஹேவ் ஐ எவர்'.
தமிழர் வாழ்க்கைச் சாரம் சரியாகப் பிடிபடாமல் மேலோட்டமான சித்திரிப்பாக நாடகம் இருந்தது என்றும் அப்படி இருந்த காட்சிகளும் ஆங்காங்கே திணிக்கப்பட்டது போல் இருந்தது என்றும் சிலர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மேலும், ஆங்கில ரசிகர்களின் பார்வைக்கேற்ப நாடகம் அமைக்கப்பட்டது எனும் விமர்சனத்தையும் நாடகம் பெற்றது.
இத்தகைய விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் தமிழ் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'நெவெர் ஹேவ் ஐ எவர்' தொடர், தமிழர்களின் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது எனலாம்.

