உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உடற்பருமன் நோயால் அவதியுறுவோர், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயம் சார்ந்த நோய்கள் போன்றவற்றால் பாதிப்புறும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
அமெரிக்காவின் தேசிய முதுமை வாரியம் நடத்திய ஆய்வொன்றில் உடல் எடைமிக்கவர்கள் மன அழுத்தம், இருமுனைப் பிறழ்வு, பீதியடைதல் போன்ற மனநோய்களால் பாதிப்புறவும் அதிக வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு வாழ்வில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க மக்கள் கையிலெடுக்கும் விபரீத உணவுமுறைகள் என்ன, அவை உடல் எடையை மட்டுமல்லாமல் உடல்நலத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தமிழ் முரசு ஆராய்ந்துவந்தது.
கரி உணவுமுறை
விளக்கம்: கிளர்வுற்ற கரியை (activated charcoal) கொண்ட பானங்களை அருந்துதல்.
பொதுவான நம்பிக்கை: நம் உடலின் செரிமான மண்டலத்தால் கிளர்வுற்ற கரியைச் செரிக்க முடியாததால், அது அம்மண்டலத்தில் உள்ள நச்சுகளை மட்டும் நீக்கி, செரிமான சக்தியை வலுப்படுத்தும். இதனால், உடலெடை கட்டுக்குள் இருக்கும்.
உண்மை: கிளர்வுற்ற கரி முழுச் செரிமான மண்டலத்தையும் கடந்து செரிக்காமல் செல்லாது. அது குடலை மட்டுமே அவ்வாறு கடந்து செல்லும். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘குழந்தை உணவு’ உணவுமுறை
விளக்கம்: பொதுவான உணவு, தின்பண்டங்கள் ஆகியவற்றுக்கு மாறாக, ஒரு நாளைக்கு 16 வகை குழந்தை உணவுப்பொருள்கள்வரை உட்கொள்ளுதல்.
பொதுவான நம்பிக்கை: குழந்தைகளின் உணவு குறைந்த கலோரி அளவைக் கொண்டிருப்பதாலும் நச்சுத்தன்மை அதிகம் இல்லாததாலும் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு ஆரோக்கியமானதாகவும் விளங்குகிறது.
உண்மை: குழந்தை உணவுகளில் பதனப்பொருள்கள் குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உணவாகத் தோன்றினாலும், அவற்றில் பெரியவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இல்லாததோடு ஆரோக்கியமான உடல் கொண்ட பலர் இந்த உணவுமுறையைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவென உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐஸ்கிரீம் உணவுமுறை
விளக்கம்: ஒரு நாளைக்கு ஐந்து முறை, அதாவது கிட்டத்தட்ட அரை லிட்டர் ஐஸ்கிரீம் உண்ணுதல்.
பொதுவான நம்பிக்கை: உணவு உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்தி, கலோரி குறைபாட்டில் இருப்பதால் உடலெடையைக் குறைப்பதோடு நாவிரும்பும் ஐஸ்கிரீமை உண்ணலாம்.
உண்மை: இந்த உணவுமுறையால் கலோரி குறைபாடு மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
‘பஞ்சுருண்டை’ உணவுமுறை
விளக்கம்: ஆரஞ்சு, எலுமிச்சைச்சாறு அல்லது மற்ற இனிய பானங்களில் பஞ்சுருண்டையை முக்கி ஒரு நாளைக்கு ஐந்து உருண்டைகள்வரை உண்பது.
பொதுவான நம்பிக்கை: உடல் எடை அதிகரிக்காமலிருக்கும் அளவிற்கு மட்டும் கலோரியை உட்கொள்ள உதவும்.
உண்மை: இந்த உணவுமுறையினால் வயிறு, குடல் ஆகிய உள்ளுறுப்புகள் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்கக்கூடும். ஏனெனில், இவ்வுறுப்புகள் பஞ்சு போன்ற பொருள்களை செரிக்கும் வல்லமையைப் பெற்றவை அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய விபரீத உணவுப்பழக்கங்கள் மனிதர்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர் கல்பனா பாஸ்கரன் கூறுகிறார்.
நாம் உணவு உண்ணுகையில், பேரூட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து ஆகியவை சமமாக இருப்பதை உறுதிசெய்வது உடல்நலத்தைப் பேணிக்காப்பதில் மிகவும் இன்றியமையாத பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இத்தகைய விபரீத உணவுமுறைகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க முடியாது என்றும் உணவு உண்பதென்பது வாழ்வில் எளிய செயலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது வாழ்விற்கு நலம் சேர்க்கும் என்றும் திருவாட்டி கல்பனா கருதுகிறார்.