வாரம் இருமுறை வாழைப்பூ

வாரம் இருமுறை வாழைப்பூ

2 mins read
15871f0b-b9b1-421b-a554-b463f86fa20b
சத்துகள் நிறைந்த வாழைப்பூ - படம்: இணையம்

வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்பு கரைந்து ரத்தம் சுத்தமாகும்.

ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வர வேண்டும். செரிமானம் அதிகரிக்கும்.

மூல நோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம்.

மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்.

கையில் எண்ணெய் அல்லது உப்பு தண்ணீர் தடவிக்கொண்டு வாழைப்பூவை வெட்டினால் கையில் கறை பிடிக்காது.

மோர் கலந்த நீரில் வெட்டிய வாழைப்பூவை போடுவதால் பூ கறுக்காது. சமைக்கும்போது வெள்ளை நிறமாக பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

வாழைப்பூவை சமைக்க:

முதலில் வாழைப்பூவை எடுத்து அதன் ஒவ்வோர் இதழையும் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும். பின் ஒவ்வொரு பூவிலும் இருக்கும் நரம்பை எடுத்துவிட வேண்டும். அது வேக வைத்தாலும் வேகாது. வயிற்றுக்கும் உகந்தது அல்ல. இந்த நரம்பை வாழைப்பூ வெள்ளை நிறத்தில் வரும்வரைதான் எடுக்க வேண்டும். வாழைப்பூவின் நுனிப் பகுதியில் நரம்புகள் இருக்காது. அதனால் அதனை எடுக்கத் தேவையில்லை.

அதன் அருகிலேயே ரப்பர் போன்ற மற்றொரு இதழ் இருக்கும். அதனையும் நீக்கிவிட வேண்டும். இப்போது வாழைப்பூவை பொடியாக வெட்ட வேண்டும். பின் மோர் கலந்த நீரில் போட்டு வைத்து நன்றாகக் கழுவி, சமைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
உணவுஉடல்நலம்