சம்ஸ்க்ருதி விழாவில் நன்யாங் நுண்கலைக் கழகத்தைச் சேர்ந்த ‘பேலே’ பட்டதாரிகள் முதல்முறையாக நாதஸ்வரம், தவில் போன்ற இந்திய பாரம்பரிய இசைக்கருவிகள் எழுப்பும் இசைக்கு நடனமாடவுள்ளனர்.
இந்திய கலைகளைக் கொண்டாடும் இவ்விழா, ‘சோட்டா’ எனப்படும் சிங்கப்பூர் கலைகள் பள்ளியில் லாபநோக்கற்ற அமைப்பான கல்ப்ரவிக்ஷா ஃபைன் ஆர்ட்ஸ் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை நடைபெறவுள்ளது.
பக்தி, அரசாட்சி, பிரபல ஊடகம், நவீனம் ஆகிய நான்கு காலகட்டங்களைக் கடந்து நாதஸ்வரம் அடைந்து வந்த மாற்றங்களை மையமாகக் கொண்டது 90 நிமிட ‘மல்லரி’ நிகழ்ச்சி. நாதஸ்வர இசையை தென்னிந்திய நடன வகைகளான பரதநாட்டியத்துடனும் மோகினியாட்டத்துடனும் இணைக்கும் படைப்பாக இது இருக்கும்.
கல்ப்ரவிக்ஷா மாணவர்கள் மீரா பாலசுப்பிரமணியன் தலைமையிலும் ஓம்கார் ஆர்ட்ஸ் மாணவர்கள் ஸ்ரீதேவி சிவராஜசிங்கம் தலைமையிலும் நடனம் படைக்கவுள்ளனர். ஹரிதா ஹரிதாஸ் தலைமையில் மேதஸ்வி நடனப் பள்ளி மாணவர்கள் மோகினியாட்டத்தைப் படைக்கவுள்ளனர்.
நாதஸ்வரம், தவில், மிருதங்கம் ஆகியவற்றைக் கேரளாவின் பிரபல இசைக் கலைஞர் குழு வாசித்து இந்தப் படைப்புகளுக்கு இசை வழங்கவுள்ளனர்.
இவ்வாண்டின் பிற்பாதியில் சம்ஸ்க்ருதி விழாவுக்கென மேலும் இரண்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இரண்டு மணி நேர கர்நாடக இசைக் கச்சேரியான ‘இசை தர்பார்’, திறன்வாய்ந்த இளம் அபிஷேக் ரகுராமின் கலைநயத்தை எடுத்துக்காட்டும்.
‘காசி- தி இன்ஃபினிட்’ என்ற 90 நிமிட பரதநாட்டியப் படைப்பு, நுணுக்கமான நடன அமைப்பின் மூலமும் நடனத்தின் வழி கதை சொல்லுவதன் மூலமும் வாழ்க்கையின் அம்சங்களை உணர்த்துகிறது.
இந்தியாவின் ஆன்மீக நகரமான காசி அல்லது வாரணாசியைப் பற்றியும் கலாசாரத்தின் மீது அதன் ஆழமான தாக்கத்தைப் பற்றியும் உணர்த்தும் படைப்பாகவும் இது விளங்கும்.
படைப்புகளில் புதுமையையும் தனித்தன்மையையும் தம் அணுகுமுறையில் கையாளும் தேர்ச்சிபெற்ற மீரா நடனம் அமைத்துள்ளார். இவரின் வழிகாட்டலில் சிங்கப்பூரின் இளம், திறன்வாய்ந்த நடனமணிகள் ‘காசி-தி இன்ஃபினிட்’ படைப்பில் அங்கம் வகிப்பர்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் உறுப்பினரான கதகளி ஆர்வலர் ஜோதிகா ஜோஷி சிறப்பு அங்கம் ஒன்றையும் படைக்கவுள்ளார்.
“பாரம்பரிய இந்திய இசை, நடனம் ஆகியவற்றின் ஆற்றல் மற்றும் வரலாற்றுச் சிறப்பு தொடர்பான விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்துவது சம்ஸ்க்ருதியின் நோக்கமாகும்,” என்றார் கல்ப்ரவிக்ஷாவின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள மீரா.
“மக்கள், இடங்கள், நடைமுறைகள் ஆகிய பிரிவுகளின்கீழ் நிகழ்ச்சிகள் மிகக் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளன. பல்லினச் சமூகத்திற்கு அர்த்தமுள்ள, புதுமையான அனுபவத்தை ஒவ்வொரு பிரிவும் வழங்க முற்படுகிறது,” என்றார் அவர்.