டாக்டர் அப்துல் கலாமின் 8வது நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல் கலாம் லட்சியக் கழகம் (சிங்கப்பூர்), ஜூலை 23ஆம் தேதியன்று மரம் நடுவிழாவுக்கு ஏற்பாடு செய்தது.
‘வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அவற்றைச் சிறப்பாகப் பராமரிப்பதை லட்சியமாகக் கொள்ளுங்கள். அது பில்லியன் மரங்களாகப் பெருகும். மரங்களை வளர்ப்பதன் மூலம் மண்ணைக் காப்பாற்றுங்கள். உலக வெப்பமயமாதலைத் தடுத்து மண்ணைக் காப்பாற்ற மரம் நடுங்கள்’ என்று முழக்கமிட்டவர் டாக்டர் அப்துல் கலாம்.
மாணவர்ளைச் சந்திக்கும்போதெல்லாம் மரம் நடுவதை அவர் வலியுறுத்திப் பேசி, மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றியிருந்தார் டாக்டர் அப்துல் கலாம்.
அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில் சிங்கப்பூரின் அப்துல் கலாம் லட்சியக் கழகம் ஏற்பாடு செய்த மரம் நடுவிழாவில் சுமார் 70 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் புளோக் 460Aக்கு அருகிலுள்ள சாலை ஓரம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பூங்காக் கழகம் இதற்கான முழு ஒத்துழைப்பை நல்கியது.
தேவையான மரக்கன்றுகளைத் தந்ததோடு, இடத்தையும் பூங்காக் கழகம் தீர்மானித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துதந்தது. இதன் தொடர்பில் அப்துல் கலாம் லட்சியக் கழகம் அதன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.
நிகழ்ச்சிக்கு தேசிய பூங்காக் கழகத்தின் சார்பாகவும் சில அதிகாரிகள் கலந்துகொண்டு, ஆர்வத்துடன் பங்குகொண்ட உறுப்பினர்களை வழிநடத்தினர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு, 11 மணிக்கு நிறைவடைந்தது.