சைனஸ் எனும் நீர்ச்சேர்க்கை பெரியவர்களில் 90 விழுக்காட்டினரைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது. பலரிடம் தென்படும் இந்தப் பொதுவான உடல்நலப் பிரச்சினை ஒரு நோய் அளவுக்கு கடுமை இல்லையென்றாலும் அது பல வகைகளிலும் ஒருவரின் வாழ்வில் இடையூறாக இருக்கிறது.
காலையில் எழுந்தவுடன் மூக்கிலிருந்து வரும் சளி, திடீரென தும்மல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது, தலைவலி, மூச்சு விட சிரமம் போன்றவை அவற்றில் அடங்கும். இவற்றை மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வருவது கடினம் என்ற நிலையில் மக்கள் வீட்டில் அவர்களுக்குத் தெரிந்த வைத்தியம் மூலம் நிவாரணம் பெறலாம் என்று மருத்துவர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர்.
உப்புநீர் கொண்டு கழுவுதல்
உப்புக் கரைசலை வைத்து நாசித் துவார வழிகளைக் கழுவினால் மூக்கில் எரிச்சல் மற்றும் வீக்கம் குறையும். சிறிதளவு நீரில் கொஞ்சம் உப்பையும் சமையல் சோடாவையும் சேர்த்துக்கொண்டு அந்தக் கலவையை உள்ளங்கைகளில் வைத்து மோப்பம் பிடிக்கலாம். அன்றாடம் இதை செய்து வந்தால் நீர்ச்சேர்க்கைப் பிரச்சினையில் பெரிய அளவில் முன்னேற்றம் தென்படும் என்று நம்பப்படுகிறது.
நீராவி உறிஞ்சல்
மூக்கு துவார வழிகளைத் திறக்க நீராவியைப் பயன்படுத்துவது சைனஸ் அழுத்தத்தைப் போக்க உதவும். நீராவி பயன்படுத்துவது மிக எளிது. தண்ணீரைக் கொதிக்கவைத்து ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றிய பிறகு துண்டுடன் தலையை மூடி மூக்கு வழியாக சுவாசித்தால் மிகவும் நல்லது.
குளியல்
சூடான குளியல், குளியலறையை விரைவாக நிரப்பக்கூடிய நீராவியை உருவாக்குகிறது. நீராவி காற்றை ஈரப்பதமாக்கி அதை ஒருவர் சுவாசிக்கும்போது அது அவர்களின் மூக்கு பத்திகளை ஈரமாக்கி சளியை போக்குகிறது.
ஊசிமூலம் அழுத்தம்
அக்குபிரஷர் என்பது வலி அல்லது நோயின் அறிகுறிகளைப் போக்க உடலின் குறிப்பிட்ட இடங்களுக்கு அழுத்தம் கொடுப்பது. இது பலவிதமான சளி, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதால் மக்கள் இந்தத் தெரிவை பயன்படுத்திப் பார்க்கலாம்.
நீரேற்றம்
எந்த நேரத்திலும் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். சரியான நீரேற்றம் நாசித் துவார வழிகளை ஈரப்பதமாகவும் சரியாகவும் வைத்திருக்க உதவும்.
மிதச்சூட்டு ஒற்றடம்
சைனஸ் பகுதியில் வெப்பத்தைப் பயன்படுத்துவது அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதைச் செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று சூடான துணியைப் பயன்படுத்துவது. மிதமான சூடான நீரின் கீழ் ஒரு சுத்தமான துணியை வைத்து அதை மடித்து மூக்கு மற்றும் கன்னங்களின் மேல் சில நிமிடங்கள் வைத்து ஒற்றடம் கொடுக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
உறக்கப் பழக்கம்
முதலில் உடல் குணமடைய ஓய்வு முக்கியம். உறக்கத்தின்போது உடல் அதிக வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. சைனஸ் மற்றும் சைனஸ் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை முறியடிக்க இது வகை செய்யும்.


