டிக்டாக் ஊடகம், ‘பாப்புலர்’ கடையுடன் இணைந்து படைப்பாளிகள், ஆசிரியர்கள், வாசிப்பாளர்களை ஒன்றிணைக்கும் ‘புக்டாக்’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 15 முதல் டிக்டாக் பயனர்கள் ‘புக்டாக்’ எனும் ‘ஹேஷ்டேக்’ உடன் புனைகதை முதல் தன்முன்னேற்றம் வரையிலான புத்தகங்களைப் பரிந்துரைக்கத் தொடங்கினர்.
புத்தக வாசிப்பையும் எழுத்துக் கலையைப் போற்றும் ஆர்வத்தையும் தூண்டும்விதமாக டிக்டாக் இதனைத் தொடங்கியுள்ளது.
‘புக்டாக்’ ஹேஷ்டேகில், சிங்கப்பூரில் மட்டும் புத்தக மதிப்புரைகள், பரிந்துரைகள், புத்தகத்திலிருந்து குறிப்பு எடுத்தல், பிரபலமான புதினங்களின் மறுவடிவமைப்புகள் உள்ளிட்டவை குறித்த 6,000 காணொளிகள் உருவாக்கப்பட்டு, அவை 100 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாடெங்கிலும் 25 ‘பாப்புலர்’ கடைகளில் பல்வேறு பயனர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இதற்குமுன் தொடங்கப்பட்ட ‘லேர்ன் ஆன் டிக்டாக்’ எனும் இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாட, டிக்டாக் ஊடகம், வாசிப்பு சவால்களையும் அதற்குப் பரிசுகளையும் வழங்கி வருகிறது.
இவற்றின்மூலம் தொடர்ந்து வாசிப்பின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தி, அவர்களை புத்தகங்கள் வாசிக்க ஊக்குவிக்கிறது இந்த ‘புக்டாக்’.